/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
20 ஆண்டாக சீரமைக்கப்படாத சாலை வளையகரணை கிராமவாசிகள் வேதனை
/
20 ஆண்டாக சீரமைக்கப்படாத சாலை வளையகரணை கிராமவாசிகள் வேதனை
20 ஆண்டாக சீரமைக்கப்படாத சாலை வளையகரணை கிராமவாசிகள் வேதனை
20 ஆண்டாக சீரமைக்கப்படாத சாலை வளையகரணை கிராமவாசிகள் வேதனை
ADDED : ஜூன் 06, 2025 01:38 AM

மறைமலைநகர்:செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்துார் ஒன்றியம், சிங்கபெருமாள் கோவில் அடுத்த ஆப்பூர் - வளையகரணை இடையே, 3 கி.மீ., துார சாலை உள்ளது.
இந்த சாலை வழியாக வளையகரணை கிராம மக்கள் சிங்கபெருமாள் கோவில், மறைமலை நகர், செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளுக்கு, தங்களின் அடிப்படை தேவைகளுக்காக சென்று வருகின்றனர்.
பலர், ஒரகடம் பகுதியில் உள்ள தொழிற்சாலைகளுக்கு தினமும் வேலைக்குச் சென்று வருகின்றனர்.
இந்த சாலை பல ஆண்டுகளாக சிதிலமடைந்து, ஜல்லிக்கற்கள் பெயர்ந்து, சாலை முழுதும் புதர் மண்டி காணப்படுகிறது.
இதன் காரணமாக, இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர். இருபுறமும் வனப்பகுதி என்பதால், முட்செடிகள் வளர்ந்து சாலையை ஆக்கிரமித்து உள்ளன.
இதன் காரணமாக, வாகன ஓட்டிகள் இந்த சாலையில் செல்வதை தவிர்த்து, 2 கி.மீ., துாரம் சுற்றிச் செல்கின்றனர்.
இதுகுறித்து வளையகரணை கிராமவாசிகள் கூறியதாவது:
20 ஆண்டுகளாக இந்த சாலை சீரமைக்கப்படாமல் உள்ளது. கோடை காலங்களில் அருகில் உள்ள ஏரியில் தண்ணீர் இருக்காது. அப்போது அங்கு உருவாகும் தற்காலிக பாதையில் சென்று வருவோம்.
மற்ற நேரங்களில், 2 கி.மீ., சுற்றி, தனியார் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் அமைக்கப்பட்டு உள்ள சாலை வழியாக சென்று வருகிறோம்.
சாலையின் இருபுறமும் வனப்பகுதி என்பதால், வனத்துறையினர் புதிய சாலை அமைப்பதற்கு முட்டுக்கட்டையாக உள்ளனர்.
இந்த சாலையில் பெரும்பாலான பகுதிகள் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ளன.
ஆனால், இந்த சாலையை பயன்படுத்துவது காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்துார் ஒன்றியம், வளையகரணை கிராம மக்கள் என்பதால், இரு மாவட்ட அரசு அதிகாரிகளும் கண்டுகொள்வதில்லை.
இதன் காரணமாக, அவசர காலங்களில் கூட செல்ல முடியாத நிலை உள்ளது. அடிக்கடி வாகனங்களின் டயர்கள், கற்கள் குத்தி பஞ்சராகி விடுகின்றன.
மேலும், வனப்பகுதியில் இரவு நேரங்களில், கிராமத்திற்கு தொடர்பில்லாத நபர்களின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. எனவே, இரு மாவட்ட நிர்வாகமும் தலையிட்டு, இந்த சாலையை புதிதாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.