/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
நெல்லிக்குப்பத்தில் குழாய் உடைந்து குடிநீர் வீண்
/
நெல்லிக்குப்பத்தில் குழாய் உடைந்து குடிநீர் வீண்
ADDED : ஜூலை 11, 2025 01:37 AM

திருப்போரூர்:திருப்போரூர் அருகே நெல்லிக்குப்பத்தில், குழாய் உடைந்து குடிநீர் வீணாகி வருகிறது.
செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் வட்டத்தில், 650 ஏக்கர் பரப்பளவு உடைய கொண்டங்கி ஏரி உள்ளது.
கூட்டுக் குடிநீர் திட்டத்தின் வாயிலாக, இந்த ஏரியில் இருந்து, திருப்போரூர் பேரூராட்சி சார்ந்த பகுதிகளுக்கு, குழாய் வாயிலாக குடிநீர் எடுத்துச் செல்லப்படுகிறது.
இதில், திருப்போரூர் பேரூராட்சிக்கு செல்லும் குடிநீர் குழாய் நெல்லிக்குப்பம் அருகே உடைந்து, கடந்த சில மாதங்களாக குடிநீர் சாலையில் வழிந்தோடி வீணாகி வருகிறது.
இது பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, குடிநீர் குழாய் உடைப்பை சீரமைக்க, மாவட்ட நிர்வாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து, செங்கல்பட்டு மாவட்ட விவசாய சங்க துணைத்தலைவர் கெஜராஜன் கூறியதாவது:
குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாவது குறித்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும், யாரும் கண்டுகொள்ளவில்லை.
கூட்டுக்குடிநீர் திட்டம் துவக்கும் போது, கடும் எதிர்ப்பு இருந்தது. இவ்வாறு, கஷ்டப்பட்டு பெற்ற குடிநீர், குழாய் உடைந்து கடந்த ஆறு மாதங்களாக வீணாகி வருகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.