/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கோவளத்தில் ரூ.12.10 கோடியில் கூட்டு குடிநீர் திட்டம்...வேகமெடுக்குமா? : புதுப்பாக்கம் ஏரியிலிருந்து குடிநீர் குழாய் பதிப்பு துவக்கம்
/
கோவளத்தில் ரூ.12.10 கோடியில் கூட்டு குடிநீர் திட்டம்...வேகமெடுக்குமா? : புதுப்பாக்கம் ஏரியிலிருந்து குடிநீர் குழாய் பதிப்பு துவக்கம்
கோவளத்தில் ரூ.12.10 கோடியில் கூட்டு குடிநீர் திட்டம்...வேகமெடுக்குமா? : புதுப்பாக்கம் ஏரியிலிருந்து குடிநீர் குழாய் பதிப்பு துவக்கம்
கோவளத்தில் ரூ.12.10 கோடியில் கூட்டு குடிநீர் திட்டம்...வேகமெடுக்குமா? : புதுப்பாக்கம் ஏரியிலிருந்து குடிநீர் குழாய் பதிப்பு துவக்கம்
ADDED : ஏப் 15, 2025 06:33 PM

திருப்போரூர்:திருப்போரூர் ஒன்றியம், கோவளம் பகுதிக்கு, 25 ஆண்டுகளாக தையூர் ஊராட்சியில் இருந்து, இரண்டு கிணறுகள் வாயிலாக குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
மேலும், கோவளம் கிராமம் கடலை ஒட்டி இருப்பதாலும், அங்கு உப்பு நிறைந்த நீராக இருப்பதாலும், குடிநீர் தேவை மேலும் அதிகரித்து வருகிறது.
இதை கருத்தில் கொண்டு, 'கோவளம் ஊராட்சி மற்றும் சுற்றியுள்ள 10 கிராமங்களின் குடிநீர் தேவைக்காக,'ஜல் ஜீவன்' திட்டத்தின் கீழ், 12.10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும்' என, 2022 ஏப்ரல் மாதம், சட்டசபையில் அமைச்சர் கே.என்.நேரு அறிவித்தார்.
இதற்காக கோவளத்தில், 2023 ஜனவரியில், அடிக்கல் நாட்டு விழா நடந்தது.
அதைத் தொடர்ந்து, கோவளம் பிரதான சாலையில், 'பொக்லைன்' இயந்திரம் வாயிலாக பள்ளம் தோண்டி, குடிநீர் குழாய்கள் புதைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடந்து வந்தன.
அதே நேரத்தில், மேற்கண்ட திட்டத்திற்கு, தையூர் ஏரியில் கிணறு தோண்டும் பணிகளைத் துவக்க முடிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், இத்திட்டத்தை ரத்து செய்யக் கோரி, 2023 ஏப்., 12ம் தேதி ஊராட்சி நிர்வாகம் சார்பில், ஊராட்சி அலுவலக வளாகத்தில், ஊராட்சி தலைவர் குமரவேல், துணைத் தலைவர், ஒன்றிய கவுன்சிலர்கள், வார்டு உறுப்பினர்கள் பங்கேற்று, ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.
ஆனாலும், அதே ஆண்டு ஏப்., 24ம் தேதி, கூட்டுக் குடிநீர் திட்டத்திற்காக தையூர் ஏரியில், பொக்லைன் இயந்திரம் வாயிலாக, போலீஸ் பாதுகாப்புடன் கிணறு தோண்டும் பணிகள் நடந்தன.
இதை அறிந்த அப்பகுதி மக்கள், 500க்கும் மேற்பட்டோர், தொடர்ந்து இரண்டு நாட்களாக ஏரிக்கு வந்து, முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
இதையடுத்து அரசு அதிகாரிகள் தரப்பில், தையூர் மக்களுடன் பல்வேறு கட்ட பேச்சு நடைபெற்றது. இதில் எந்த இறுதி முடிவும் எட்டப்படாததால் பணிகள் நிறுத்தப்பட்டு, அங்கு நடைபெறும் இந்த குடிநீர் திட்டம் கைவிடப்பட்டது.
இதற்கிடையில், 2023 ஏப்., 28 ம் தேதி, கோவளம் ஒன்றிய கவுன்சிலர் யாஸ்மின் தலைமையில், கூட்டுக் குடிநீர் திட்டத்தை செயல்படுத்தி, கோவளம் பகுதிக்கு குடிநீர் வழங்க வேண்டும் என, கோவளம் பேருந்து நிறுத்தத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இதைத் தொடர்ந்து, தையூர் பகுதிவாசிகள் ஏரியை முற்றுகையிட்டு எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, கேளம்பாக்கம் ஊராட்சியில் உள்ள வண்ணான் ஏரியில் இத்திட்டத்தை செயல்படுத்தலாம் என, அதிகாரிகள் முடிவு செய்தனர்.
இதற்காக, கடந்த 2024 ஜூன் 8ம் தேதி, போலீஸ் பாதுகாப்புடன் ஏரியில் இயந்திரங்கள் வாயிலாக, மண் மற்றும் நீர் பரிசோதனை பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இதையறிந்த கேளம்பாக்கம் பகுதிவாசிகள், ஏரியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஏற்கனவே கேளம்பாக்கத்தில் தண்ணீர் பற்றாக்குறை உள்ளதாகவும், இத்திட்டத்தால் மேலும் பாதிப்பு ஏற்படும் எனவும் தெரிவித்தனர். இதனால், இந்த திட்டத்தை கைவிடக் கோரி ஊராட்சி தலைவர் ராணி, ஒன்றிய கவுன்சிலர் திவ்யா உட்பட பொதுமக்கள், கோரிக்கை மனு அளித்தனர்.
தொடர்ந்து, அதிகாரிகள் முன்னிலையில் கேளம்பாக்கம் மக்களிடம் பல்வேறு கட்ட பேச்சு நடந்தது. இதில் எந்த முடிவும் எட்டப்படாததால், இங்கும் இந்த குடிநீர் திட்டப் பணிகள் கைவிடப்பட்டன.
இறுதியாக, திருப்போரூர் அடுத்த புதுப்பாக்கத்தில், கூட்டுக் குடிநீர் திட்டம் துவக்கப்பட்டது. ஆனால் புதுப்பாக்கத்திலும், ஒரு பகுதி மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
என்றாலும், புதுப்பாக்கம் ஏரியில் இத்திட்டத்திற்காக மூன்று கிணறுகள் தோண்டப்பட்டுள்ளன. அடுத்தகட்ட பணியாக, குடிநீர் குழாய்கள் புதைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
ஏற்கனவே, இதே கோவளத்திற்கு 2008ம் ஆண்டு, புதுப்பாக்கம் ஏரியில் கூட்டுக் குடிநீர் திட்டத்திற்காக ஒரு கிணறு தோண்டப்பட்டு, நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டது.
ஆனால், நீரின் தரம் சரியில்லாததால் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படாமல் விடப்பட்டது.
எனினும், தற்போது மூன்று கிணறுகள் தோண்டி, இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
குடிநீர் குழாய் பதிப்பு
கோவளம் பகுதி கூட்டுக் குடிநீர் திட்டத்திற்காக, திருப்போரூர் அடுத்த புதுப்பாக்கம் ஏரியில் பணிகள் துவங்கி, 85 சதவீதம் பணிகள் முடிந்துள்ளன. அடுத்தகட்ட பணியாக, குடிநீர் குழாய்கள் புதைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
- தமிழ்நாடு வடிகால் வாரிய அதிகாரிகள்

