/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
10 ஆண்டாக கிடப்பில் போடப்பட்ட தையூர் பேருந்து பணிமனை திட்டம் போக்குவரத்து துறை நடவடிக்கை எடுக்குமா?
/
10 ஆண்டாக கிடப்பில் போடப்பட்ட தையூர் பேருந்து பணிமனை திட்டம் போக்குவரத்து துறை நடவடிக்கை எடுக்குமா?
10 ஆண்டாக கிடப்பில் போடப்பட்ட தையூர் பேருந்து பணிமனை திட்டம் போக்குவரத்து துறை நடவடிக்கை எடுக்குமா?
10 ஆண்டாக கிடப்பில் போடப்பட்ட தையூர் பேருந்து பணிமனை திட்டம் போக்குவரத்து துறை நடவடிக்கை எடுக்குமா?
ADDED : பிப் 06, 2024 08:51 PM

திருப்போரூர்:சென்னையில் இருந்து கேளம்பாக்கம், திருப்போரூர், மாமல்லபுரம் மற்றும் கோவளத்திற்கு, தினமும் 400க்கும் மேற்பட்ட மாநகர பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இந்த பேருந்துகள், திருவான்மியூர், தாம்பரம், அடையாறு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பணிமனைகளில் நிறுத்தப்படுகின்றன.
இதையடுத்து, பேருந்துகள் பழுதடைந்தால், பழுது நீக்கம் செய்வதற்காக, இந்த பணிமனைகளில் இருந்து பராமரிப்பு வாகனம் மற்றும் பணியாளர்கள் வருகின்றனர்.
இவர்கள் வந்து பேருந்தை சீரமைக்க நீண்ட நேரம் ஆகிறது. இதனால், காலவிரயம், எரிபொருள் வீணாகுதல், கூடுதல் செலவினம் ஆகியவை ஏற்படுகின்றன.
அதேபோல், மாமல்லபுரம், திருப்போரூர் பகுதிக்கு இரவு பணியில் இருக்கும் ஓட்டுனர் மற்றும் நடத்துனர்கள், சென்னைக்கு சென்று, பேருந்துகளை பணிமனையில் நிறுத்திவிட்டு, வீட்டிற்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது.
தையூர் பகுதியில் பணிமனை அமைக்கப்பட்டால், இந்த தடத்தில் பணியாற்றுவோர் விரைவில் வீடு திரும்பவும், மீண்டும் பணிக்கு வரவும் எளிதாக இருக்கும்.
எனவே, 2012 சட்டசபை கூட்டத்தொடரில், விதி எண் 110ன் கீழ், ஓ.எம்.ஆர்., சாலையில் உள்ள திருப்போரூர் அடுத்த தையூர் ஊராட்சியில் அடங்கிய செங்கண்மால் கிராமத்தில், மாநகர போக்குவரத்து பணிமனையுடன் கூடிய பேருந்து நிலையம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதற்காக, ஓ.எம்.ஆர்., சாலையை ஒட்டி, 11 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, தகவல் பலகையும் வைக்கப்பட்டது. இதை, பகுதிவாசிகளும் பயணியரும் வரவேற்று மகிழ்ந்தனர்.
ஆனால், பணிமனை அமைவதற்கான எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. திட்டம் 10 ஆண்டுகளாக கிடப்பில் உள்ளதால் ஊழியர்கள், பகுதிவாசிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
எனவே, மாநகர போக்குவரத்து அதிகாரிகள் மற்றும் தமிழக அரசு இணைந்து, கிடப்பில் உள்ள திட்டத்தை நிறைவேற்ற துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

