/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ஓ.எம்.ஆர்., ரவுண்டானாவில் வடிகால்வாய் அமையுமா?
/
ஓ.எம்.ஆர்., ரவுண்டானாவில் வடிகால்வாய் அமையுமா?
ADDED : நவ 27, 2024 11:54 PM

திருப்போரூர்:திருப்போரூரில் உள்ள ஓ.எம்.ஆர்., சாலை, செங்கல்பட்டு சாலை, மாமல்லபுரம் சாலை ஆகியவற்றின் விரிவாக்கப் பணிக்காக, அதிலிருந்த ஆக்கிரமிப்புகள் நெடுஞ்சாலைத்துறை சார்பில் அகற்றப்பட்டன.
ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட இடத்தில், சாலை விரிவாக்க பணி, வடிகால்வாய் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
இதில், திருப்போரூர் ஓ.எம்.ஆர்., சாலை, மேற்கு புறத்தில் ரவுண்டானா முதல் இந்தியன் வங்கி வரை, இன்னும் வடிகால்வாய் மற்றும் புதிய சாலைப்பணி துவங்கப்படவில்லை.
இதனால், சாலையோரத்தில் கரடுமுரடாகவும், சேறும் சகதியுமாகவும் உள்ளன. இதனால், சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள், சாலையோரம் உள்ள வணிக கடை வியாபாரிகள், குடியிருப்புவாசிகள், பேருந்திற்கு காத்திருக்கும் பயணியர் என, அனைத்து தரப்பினரும் அவதிப்பட்டு வருகின்றனர்.
எனவே, போக்குவரத்து நெரிசல் மிக்க ஓ.எம்.ஆர்., சாலை மேற்கு புறத்தில், வடிகால்வாய் மற்றும் சாலை வசதி ஏற்படுத்த, நெடுஞ்சாலை துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.