/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
நடுக்கடலில் தத்தளித்த புள்ளிமானை மீட்ட மீனவர்கள்
/
நடுக்கடலில் தத்தளித்த புள்ளிமானை மீட்ட மீனவர்கள்
ADDED : ஜூலை 11, 2011 11:28 PM
சென்னை : நடுக்கடலில் தத்தளித்த புள்ளிமானை, மீனவர்கள், அரை மணி நேரம் போராடி, உயிருடன் மீட்டனர்.
கர்ப்பமாக உள்ள மான், வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. தேவைப்படும் சிகிச்சை அளித்து மானை மீண்டும் காட்டில்விட்டுவிட வனத்துறை முடிவு செய்துள்ளது. சென்னை, எண்ணூர் தாழங்குப்பத்தைச் சேர்ந்தவர் மாணிக்கம். இவரது பைபர் படகில் செல்வ ராஜ் உள்ளிட்ட நான்கு மீனவர்கள், நேற்று அதிகாலை மீன்பிடிக்க கடலுக்குள் சென்றனர். 4 கி.மீ., தூரம் சென்று மீன்பிடிக்க முயன்றபோது, அலையில் மான் ஒன்று தத்தளித்துக் கொண்டிருந்தது. அதை பிடிக்க முயன்றபோது, பிடிபடாமல் அலையில் சுற்றித் திரிந்தது.
மீனவர்கள் அரை மணி நேரத்திற்கும் மேல் போராடி, மானை உயிருடன் மீட்டு, நேற்று காலை தாழங்குப்பம் கடற்கரை பகுதிக்கு கொண்டு வந்தனர். வனத்துறை ஊழியர் சேகர், எண்ணூர் வந்து, மீனவர்களிடமிருந்து மானை பெற்றுக் கொண்டார். மானை மீட்ட செல்வராஜ்,' அலையில் சிக்கி மான் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது. அரை மணி நேரம் போராடி மீட்டோம்' என்றார். 'பிடிபட்ட மான், புள்ளிமான் இனத்தைச் சேர்ந்தது. ஐந்து வயதிருக்கலாம். வண்டலூரில் ஒப்படைக்க உள்ளோம். டாக்டர்கள் சிகிச்சை அளித்தபின், மானை எங்கு விடுவது என அதிகாரிகள் முடிவு செய்வர்' என, வன ஊழியர் சேகர் கூறினர்.
வேளச்சேரி வனச்சரகர் டேவிட்ராஜ், ''கிண்டி தேசிய சிறுவர் பூங்கா, கவர்னர் பங்களாவைச் சுற்றி, 60 ஆண்டுகளுக்கு முன் சுற்றுச்சுவர் அமைத்தபோது, வளாகத்தில் இருந்த ஆறு மான்கள் தப்பி வெளியில் சென்றன. இவை, தற்போது பெருகிவிட்டன. சமீபத்திய கணக்கெடுப்பில், 997 மான்கள் வேளச்சேரி, ஆதம்பாக்கம், கோட்டூர்புரம் மற்றும் சென்னை புறநகர் பகுதிகளிலும், எந்த அச்சுறுத்தலுமின்றி சுதந்திரமாகவும், பல பகுதிகளில் மக்களோடு வசிப்பது கண்டறிப்பட்டுள்ளது' என்றார். மேலும்,'பிடிபட்ட மான், எண்ணூர் புலிகாட் காட்டுப்பகுதியிலிருந்து தப்பியிருக்கலாம். சிகிச்சை அளித்து, மீண்டும் காட்டுப்பகுதியில் விடப்படும்'' என்றார்.