/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
இடைவிடாத பயிற்சி நீச்சல் குளத்தில் மூழ்கி 10 வயது சிறுவன் பலி
/
இடைவிடாத பயிற்சி நீச்சல் குளத்தில் மூழ்கி 10 வயது சிறுவன் பலி
இடைவிடாத பயிற்சி நீச்சல் குளத்தில் மூழ்கி 10 வயது சிறுவன் பலி
இடைவிடாத பயிற்சி நீச்சல் குளத்தில் மூழ்கி 10 வயது சிறுவன் பலி
ADDED : ஆக 06, 2024 12:51 AM

கொளத்துார், கொளத்துார், விநாயகபுரத்தைச் சேர்ந்தவர் பாலேக்கர், 38. இவரது மனைவி ராணி. தம்பதியின் மகன் கிருத்திக் சபரீஷ்கர், 10. சிறப்பு குழந்தையான இவருக்கு, மருத்துவ ஆலோசனையின்படி நீச்சல் பயிற்சி அளிக்கப்பட்டு வந்தது.
இதற்காக, கொளத்துார், அசோகா அவென்யூவில் உள்ள 'ப்ளு சீல்' நீச்சல் பயிற்சி கூடத்திற்கு, வாரத்தில் இரண்டு நாட்கள் சிறுவனுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில், நேற்று முன்தினம் பிற்பகல் மகனை அழைத்து கொண்டு பாலேக்கர் - ராணி தம்பதி அங்கு சென்றனர். கிருத்திக் சபரீஷ்கருடன், ராணி மட்டும் நீச்சல் குளத்திற்கு சென்றார். பாலேக்கர் காரில் அமர்ந்து, தன் லேப் - டாப்பில் அலுவலக பணிகளை மேற்கொண்டுள்ளார்.
நீச்சல் பயிற்சியில் தொடர்ந்து ஈடுபட்ட சிறுவன், திடீரென மயக்கமடைந்துள்ளான். சிறுவன் கிருத்திக் சபரீஷ்கரை, தன் தோளில் போட்டு காருக்கு ராணி ஓடி வந்துள்ளார். சிறுவனை உடனடியாக பெரியார் நகர் அரசு மருத்துமனையில் சேர்த்துள்ளனர். அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள், அவன் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து, கொளத்துார் காவல் நிலையத்தில் ராணி புகார் அளித்தார்.
அதில், அவர் குறிப்பிட்டிருந்ததாவது:
குழந்தையை மூச்சு விட கூட நேரம் கொடுக்காமல் தொடர்ச்சியாக நீச்சல் பயிற்சி அளித்தனர். இடைவிடாத பயிற்சியால் கிருத்திக் சபரீஷ்கர் மூச்சு விட சிரமப்பட்டு, நீரில் தத்தளித்தான். அதைப் பார்த்து, பயிற்சியாளரிடம் தெரிவித்தேன். அதற்கு அவர் 'அப்படி இருந்தால் தான் நீச்சல் கற்றுக் கொள்ள முடியும். தானாக நீச்சல் பழகி மேலே வருவார்' என, அலட்சியமாக பதில் கூறினார். என் மகனின் இறப்பிற்கு காரணமான பயிற்சியாளர் மீதும், முறையான பயிற்சியாளர்களை கொண்டு பயிற்சி வழங்காத, மையத்தின் உரிமையாளர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து விசாரித்த போலீசார், பயிற்சியாளர் அவினேஷ், 32, மற்றும் ப்ளு சீல் உரிமையாளர் காட்வின், 35, ஆகியோரை நேற்று கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.