/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கூவம் கரையோரத்தில் ஆக்கிரமிப்பு மீண்டும் அதிகரிப்பதால் சிக்கல்
/
கூவம் கரையோரத்தில் ஆக்கிரமிப்பு மீண்டும் அதிகரிப்பதால் சிக்கல்
கூவம் கரையோரத்தில் ஆக்கிரமிப்பு மீண்டும் அதிகரிப்பதால் சிக்கல்
கூவம் கரையோரத்தில் ஆக்கிரமிப்பு மீண்டும் அதிகரிப்பதால் சிக்கல்
ADDED : ஜூன் 11, 2024 12:39 AM

அமைந்தகரை, ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட கூவம் கரையோரத்தில், அத்துமீறி கட்டட கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும், வடகிழக்கு பருவழையால் அண்ணா நகர் மண்டலத்தில் வில்லிவாக்கம், அரும்பாக்கம், அமைந்தகரை உள்ளிட்ட பகுதிகளில், கால்வாய் மற்றும் கூவம் ஆக்கிரமிப்பில் குடியிருந்தவர்கள் பாதிக்கப்பட்டனர்.
கூவம் விரிவாக்கம் திட்டத்தின் கீழ், ஆக்கிரமிப்பில் வசித்த இந்த மக்களுக்கு, புளியந்தோப்பில் உள்ள கே.பி.பார்க் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில் வீடுகள் ஒதுக்கப்பட்டு, அனைவரும் மறுகுடியமர்வு செய்யப்பட்டனர்.
இதையடுத்து, ஒவ்வொரு பகுதியாக ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகள் தீவிரமாக நடந்தன. மழைக்குப் பின், இந்த பணிகளில் தொய்வு ஏற்பட்டது. இதனால், கூவம் கரையோரத்தில் ஆக்கிரமிப்பு மீண்டும் அதிகரிக்க துவங்கியுள்ளது. அமைந்தகரை காவல் நிலையம் பின்புறத்தில் உள்ள எம்.எம்.காலனியில், கூவம் செல்கிறது. இந்த கூவம் கரையோரத்தில் கடந்த ஆண்டு, இருபுறங்களிலும் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
தற்போது, இங்கு போதிய தடுப்பு நடவடிக்கை இல்லாததால், மீண்டும் ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளன. சிலர் அத்துமீறி குப்பை மற்றும் கட்டட கழிவுகளை கொட்டியுள்ளனர்.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
ஒவ்வொரு ஆண்டும் பருவ மழைக்காலங்களில் மட்டுமே, கூவம் ஆக்கிரமிப்புகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அதன் பின், அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை. இதனால், கூவம் கரையோரங்களில் ஆக்கிரமிப்பு அதிகரிக்கிறது.
மேலும், குப்பை மற்றும் கட்டட கழிவுகள் கொட்டுவது உள்ளிட்ட அத்துமீறல் நடக்கிறது.சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதை கண்காணித்து, ஆரம்பத்திலேயே ஆக்கிரமிப்புக்கு முற்றுப்புள்ளி வைக்க, தடுப்புச் சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

