/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பகிங்ஹாம் கால்வாய்க்குள் சரிந்து விழும் தார் சாலை
/
பகிங்ஹாம் கால்வாய்க்குள் சரிந்து விழும் தார் சாலை
ADDED : செப் 02, 2024 01:54 AM

திருவொற்றியூர்:வடசென்னை, திருவொற்றியூர் மண்டலம், ஏழாவது வார்டு பகுதிக்குட்பட்ட, திருவொற்றியூர் குப்பை மேடு - கார்கில் நகர் வரை, 3 கி.மீ., தார் சாலையை நுாற்றுக்கணக்கான வாகன ஓட்டிகள் பயன்படுத்தி வருகின்றனர்.
கார்கில் நகர், ராஜாஜி நகர், வெற்றி விநாயகர்நகர் பகுதி மக்கள், போக்குவரத்திற்கு மிக பிரதானமாக, இச்சாலையை பயன்படுத்துகின்றனர்.
திருவொற்றியூர் கான்கார்ட் நிறுவனத்தில் இருந்து வெளியேறும் கன்டெய்னர் லாரிகள் உட்பட பல்வேறு கனரகவாகனங்களும், இவ்வழியே சென்று வருகின்றன.
இச்சாலை, பகிங்ஹாம் கால்வாயை ஒட்டி இருப்பதால், நீரோட்டத்தில் மண்ணின் தன்மை இளகி இருப்பதோடு, கனரக வாகனங்கள் புழக்கத்தால், மண் அழுத்தம் ஏற்பட்டு, தார் சாலை சரியும் அபாயம் உள்ளது.
ஒரு மாதத்திற்கு முன், திருவொற்றியூர் குப்பைமேடு அருகே, கனரக வாகன போக்குவரத்து அழுத்தம் காரணமாக, பகிங்ஹாம் கால்வாயின் பக்கவாட்டு சுவர், மண், மாநகராட்சி தெருவிளக்கு கம்பம் ஒன்று சரிந்து, நீர்நிலையில் விழுந்தது. அதை இன்னும் சரி செய்யவில்லை.
அதேபோல் பல இடங்களில், தார் சாலையில், நீர்நிலையை ஒட்டி சரிந்த வண்ணம் உள்ளது.
சாலை நிலைமை இப்படியிருக்க, இந்த சாலையில் பொருத்தப்பட்டிருக்கும் பல தெருவிளக்கு கம்பங்களும் மோசமான நிலையில் உள்ளன. சில கம்பங்களில் விளக்குகளே இல்லாததால், இரவில் அப்பகுதி கும்மிருட்டாக காணப்படுகிறது.
கடும் இருள் காரணமாக, வாகனங்கள் பகிங்ஹாம் கால்வாயில் பாய்வதற்கும் வாய்ப்புள்ளது. இச்சாலையை முறையாக பராமரித்து அகலப்படுத்துவதுடன், தெருவிளக்குகள் பொருத்தினால், அதிகளவில் வாகன போக்குவரத்திற்கு வசதி ஏற்படும்.
திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் குறையும் என, வாகன ஓட்டிகள் கருத்து தெரிவிக்கின்றனர்.