/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மழை வெள்ள பாதிப்பு தடுக்க மாநகராட்சி சுறுசுறுப்பு
/
மழை வெள்ள பாதிப்பு தடுக்க மாநகராட்சி சுறுசுறுப்பு
ADDED : ஆக 21, 2024 12:26 AM
சோழிங்கநல்லுார், தென் சென்னை மற்றும் புறநகரில் உள்ள, 65க்கும் மேற்பட்ட ஏரிகளில் இருந்து வெளியேறும் உபரிநீர், பகிங்ஹாம் கால்வாய் வழியாக, முட்டுக்காடு கடலில் சேர்கிறது.
பகிங்ஹாம் கால்வாய், சோழிங்கநல்லுார் மண்டலத்தில் உள்ளதால், ஒவ்வொரு பருவமழைக்கும், சோழிங்கநல்லுாரில் அதிக பாதிப்பு ஏற்படும்.
குறிப்பாக, செம்மஞ்சேரி, துரைப்பாக்கம் பகுதியில் வீடுகளில் வெள்ளம் புகுந்து பாதிப்பு ஏற்படுத்தும்.
இதனால், இந்த ஆண்டு பருவமழை பாதிப்பை தவிர்க்க, அதிக திறன் உடைய நீர் இறைக்கும் மோட்டார்கள் பயன்படுத்த, மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
இதன்படி, மண்டலத்தில் 20 குதிரை திறன் உடைய 44 நீர் இறைக்கும் மோட்டார்கள் உள்ளன.
மழைக்கு முன், 26 டிராக்டர்கள் மற்றும் 50 முதல் 100 குதிரை திறன் உடைய ஒன்பது நீர்இறைக்கும் மோட்டார்கள் கூடுதலாக பயன்படுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இதற்காக மதிப்பீடு தயாரிப்பு, ஊழியர்கள் நியமனம் போன்ற திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி நடக்கிறது.
பருவமழைக்கு எதிர்கொள்ள வேண்டிய அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் தயாராக இருக்கும் என, மாநகராட்சி அதிகாரிகள் கூறினர்.