ADDED : ஏப் 27, 2024 12:21 AM
தி.நகர், :தி.நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க, தி.நகர் உஸ்மான் சாலையில் இருந்து அண்ணா சாலை வரை, புதிய மேம்பாலம் அமைக்க மாநகராட்சி திட்டமிட்டது. கடந்த 2023 மார்ச்சில் பணிகள் துவக்கப்பட்டன.
தி.நகர், துரைசாமி சாலை -- உஸ்மான் சாலை சந்திப்பில் உள்ள மேம்பாலத்தின் தெற்கு பகுதியில் உள்ள சாய்தளத்தை, ஜி.ஆர்.டி., ஜுவல்லரி அருகே தகர்த்து, அங்கிருந்து தெற்கு உஸ்மான் சாலை வழியாக, அண்ணா சாலை சந்திப்பு வரை, 1.2 கி.மீ., துாரத்திற்கு மேம்பாலம் அமைய உள்ளது.
இந்த மேம்பாலம் 131 கோடி ரூபாய் மதிப்பில், 50 துாண்களுடன், 7.5 மீட்டர் அகலம் கொண்ட இருவழிப்பாதையாக அமைகிறது. இதில் மூன்றாம்கட்டமாக, பர்கிட் சாலை சந்திப்பில் இருந்து பழைய உஸ்மான் சாலை மேம்பாலம் வரை, 420 மீ.,க்கு பணி மேற்கொள்ள திட்டமிடப்பட்டது. பணியை முடித்து, இந்தாண்டு தீபாவளிக்கு முன் மேம்பாலத்தை திறக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கு, சென்னை மாநகர போக்குவரத்து போலீசாரிடம் அனுமதி கேட்டு, கடந்தாண்டு டிசம்பரில், மாநகராட்சி சார்பில் கடிதம் வழங்கப்பட்ட நிலையில், அனுமதி கிடைப்பதில் தொய்வு ஏற்பட்டது.
நம் நாளிதழில் செய்தி வெளியானது. போக்குவரத்து காவல் துறை சார்பில், மேம்பாலத்தை தகர்க்க அனுமதி வழங்கப்பட்டு, ஓராண்டிற்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

