/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மின் ஒயரிங் பணிகள் ஆய்வு துறை கண்டிப்பு
/
மின் ஒயரிங் பணிகள் ஆய்வு துறை கண்டிப்பு
ADDED : மே 26, 2024 12:12 AM
சென்னை, 'மின்சார ஒயரிங் வேலைகளை அரசு உரிமம் பெற்றுள்ள நபர்கள் மற்றும் மின் ஒப்பந்ததாரர் வாயிலாக மட்டுமே செய்ய வேண்டும்' என, மின் ஆய்வு துறை அறிவுறுத்தியுள்ளது.
மின் விபத்துக்களை தவிர்ப்பது குறித்து, தமிழக அரசின் மின் ஆய்வு துறை விடுத்த செய்திக்குறிப்பு:
ஐ.எஸ்.ஐ., முத்திரை பெற்ற தரமான ஒயர்கள் மற்றும் மின் சாதனங்களை மட்டுமே வாங்கி பயன்படுத்த வேண்டும். மின்சார ஒயரிங் வேலைகளை அரசு உரிமம் பெற்ற நபர்கள் மற்றும் மின் ஒப்பந்ததாரர்கள் வாயிலாக மட்டுமே செய்ய வேண்டும்.
மின், 'பிளக்குகளை' பொருத்தும் முன்பும், எடுப்பதற்கு முன்பும், சுவிட்ச் ஆப் செய்ய வேண்டும். உடைந்த சுவிட்ச், பிளக்கை உடனே மாற்ற வேண்டும். மின் கம்பத்திலோ, அவற்றை தாங்கும் கம்பிகளிலோ கால்நடைகளை கட்ட கூடாது. கம்பங்களை பந்தல்களாக பயன்படுத்த கூடாது. அதன் மீது விளம்பர பலகை கட்ட கூடாது.
மழை காலங்களில் டிரான்ஸ்பார்மர், மின் கம்பம், மின் பகிர்மான பெட்டி அருகில் செல்ல கூடாது. மின் கம்பிக்கு அருகில் உள்ள மரக்கிளைகளை வெட்ட, மின் வாரியத்தின் அதிகாரிகளை அணுக வேண்டும். இடி, மின்னலின் போது 'மிக்சி, டிவி, கிரைண்டர், கணினி, தொலைபேசி போன்றவற்றை பயன்படுத்த கூடாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.