/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஆண்டவர் கோவிலை சுற்றிலும் ஆக்கிரமிப்பு விசாக திருவிழாவில் பக்தர்கள் தவிப்பு
/
ஆண்டவர் கோவிலை சுற்றிலும் ஆக்கிரமிப்பு விசாக திருவிழாவில் பக்தர்கள் தவிப்பு
ஆண்டவர் கோவிலை சுற்றிலும் ஆக்கிரமிப்பு விசாக திருவிழாவில் பக்தர்கள் தவிப்பு
ஆண்டவர் கோவிலை சுற்றிலும் ஆக்கிரமிப்பு விசாக திருவிழாவில் பக்தர்கள் தவிப்பு
ADDED : மே 22, 2024 12:45 AM

சென்னையில் மிகவும் பிரசித்தி பெற்றது, வடபழனி ஆண்டவர் கோவில். தினமும் நுாற்றுக்கணக்கான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர்.
செவ்வாய், வார விடுமுறை மற்றும் விசேஷ நாட்களில், பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.
ஆற்காடு சாலையில் இருந்து கோவில் முகப்பிற்குச் செல்லும் பிரதான சாலையாக, ஆண்டவர் தெரு உள்ளது. இந்த தெருவின் இருபுறமுள்ள கடைகளால், நடைபாதை மற்றும் சாலை முழுமையாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.
கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்களின் வாகனங்கள் சாலையில் நிறுத்தப்படுவதால், பக்தர்கள் கோவில் நுழைவாயிலை அடையவே முடியாத நிலை ஏற்படுகிறது.
தற்போது, வைகாசி விசாக பிரம்மோற்சவம் நடப்பதால், தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து, சுவாமி தரிசனம் செய்துவிட்டுச் செல்கின்றனர். நேற்று செவ்வாய்க்கிழமை என்பதால், அச்சாலையே ஸ்தம்பித்து விட்டது.
அதேபோல தெற்கு மாடவீதி, வடக்கு மாடவீதிகளை ஆக்கிரமித்து, பிளாட்பார கடைகள் மற்றும் வாகனங்கள் நிறுத்தப்பட்டதால், பக்தர்களால் நடந்து செல்லவே முடியாத நிலை ஏற்பட்டது.
போக்குவரத்து போலீசார் எவ்வளவு முறை எச்சரித்தாலும், ஆளும் கட்சியினர்,'ஆசி' இருப்பதால், ஆக்கிரமிப்பாளர்கள் அசைந்து கொடுப்பதாக இல்லை.
எனவே, மாநகராட்சி, அறநிலையத்துறை, காவல் துறை ஒருங்கிணைந்து ஆலோசனை நடத்தி, ஆண்டவர் தெரு சாலை ஆக்கிரமிப்பு பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நெற்குன்றம் பாதை ஆக்கிரமிப்பு
சூளைமேடில் இருந்த வடபழனி வழியாக விருகம்பாக்கம் செல்வோரின் பிரதான வழித்தடமாக, நெற்குன்றம் இணைப்பு சாலை விளங்குகிறது.
மேலும், வள்ளி திருமண மண்டபம், ஆண்டவர் கோவில் வாகன நிறுத்துமிடம், மூவர் ஜீவ சமாதி கோவில், தனியார் மருத்துவமனை ஆகியவை உள்ளன.
பள்ளி, கல்லுாரிகளுக்குச் செல்லும் மாணவ, மாணவியர் இச்சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.
நெற்குன்றம் பாதை சாலை, 40 அடி அகலம் கொண்டது. சாலையின் இருபுறத்தையும் ஆக்கிரமித்து, ஏராளமான வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன.
இதனால், 'பீக் -ஹவர்சில்' கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே, இச்சாலையை ஆக்கிரமித்து நிறுத்தப்படும் வாகனங்களை அகற்ற, வழி செய்ய வேண்டும்.
- -நமது நிருபர் --

