ADDED : ஜூன் 30, 2024 12:16 AM

புழல், புழல், கதிர்வேடு, விநாயகர் கோவில் தெருவில், ஓ.ஏ.கே., என்ற பெயரில், வாசனை திரவிய தயாரிப்பு நிறுவன அலுவலகம் மற்றும் கிடங்கு உள்ளது.
இதன் உரிமையாளர் கோயம்பேடு பகுதியைச் சேர்ந்த தீபக், 49. கீழ் தளத்தில் அலுவலகமும், 3வது தளத்தில் கிடங்கும் உள்ளது.
கிடங்கில், வாசனை திரவியம் தயாரிப்பதற்கான மூலப்பொருட்கள் மற்றும் அட்டை பெட்டிகள் வைக்கப்பட்டிருந்தன.
நேற்று முன்தினம் இரவு 7:00 மணியளவில் பணிகள் முடிந்து, கிடங்கை தீபக் மற்றும் ஊழியர்கள் பூட்டி சென்றனர்.
இந்த நிலையில், நேற்று காலை 8:30 மணியளவில் கிடங்கில் இருந்து கரும்புகை வெளியேறியது. திடீரென கொழுந்து விட்டு எரியத் துவங்கியது. இதனால், அப்பகுதியே புகை மண்டலமாக மாறியது. சுற்றுவட்டார மக்கள் கண்ணெரிச்சல், மூச்சுத்திணறலால் அவதிப்பட்டனர்.
மாதவரம், கொளத்துார் மற்றும் அம்பத்துார் தீயணைப்பு நிலையங்களில் இருந்து ஐந்துக்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில் வீரர்கள் விரைந்து வந்து, இரண்டு மணி நேரம் போராடி தீயை கட்டுப்படுத்தினர்.
இந்த விபத்தில், முழு கட்டடமும் சேதமாகி இடிந்து விழும் நிலையில் உள்ளது.
முதற்கட்ட விசாரணையில், விபத்திற்கு மின்கசிவு காரணம் என கூறப்படுகிறது. விபத்து மற்றும் சேதாரம் குறித்து, புழல் போலீசார் விசாரிக்கின்றனர்.
