ADDED : மே 29, 2024 12:26 AM
எண்ணுார், எண்ணுார், தாழங்குப்பத்தைச் சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன், 58; மீனவர். இவர், நேற்று நான்கு மீனவர்களுடன் பைபர் படகில் முகத்துாவார ஆற்றங்கரையில் இருந்து, கடலுக்கு மீன்பிடிக்க சென்றார்.
கடலில் சிறிது துாரம் சென்ற நிலையில், அலையின் வேகம் அதிகரித்ததால், ஹரிகிருஷ்ணன் சென்ற படகு கவிழ்ந்தது. படகில் இருந்த மற்ற மீனவர்கள் கடலில் நீந்தி கரை சேர்ந்தனர். ஆனால், ஹரிகிருஷ்ணன் மட்டும் கரை திரும்பவில்லை.
இதையடுத்து, தப்பி வந்த மீனவர்கள், எண்ணுார் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பின், மீனவர்கள் உதவியுடன் பைபர் படகு வாயிலாக போலீசார் கடலில் தேடினர். ஆனால், ஹரிகிருஷ்ணன் கிடைக்கவில்லை.
இந்நிலையில், ஹரிகிருஷ்ணனின் உடல் கொசஸ்தலை ஆற்றின் கரையோரம் கரை ஒதுங்கியது. எண்ணுார் போலீசார் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.