
தாம்பரம், வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ள நிலையில், புறநகர் பகுதிகளில், நேற்று காலை சாரல் மழை பெய்ததால், மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
கத்திரி வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், புறநகர் பகுதிகளான தாம்பரம், மாடம்பாக்கம், சேலையூர், குரோம்பேட்டை, பல்லாவரம், பெருங்களத்துார் உள்ளிட்ட பகுதிகளில், நேற்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
பின், சில நிமிடங்கள் சாரல் மழை பெய்தது. படப்பையில், 30 நிமிடங்கள் பலத்த மழை பெய்தது. வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில், திடீர் மழை பெய்து, குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியதால், மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
குன்றத்துார் சுற்றுபுறத்திலும் நேற்று கோடை மழை பெய்தது. குன்றத்துார் - --போரூர் நெடுஞ்சாலையிலும், மாங்காடு-- - முகலிவாக்கம் சாலையிலும் போதிய மழைநீர் வடிகால்வாய் இல்லாததால், சாதாரண மழைக்கே சாலையில் மழைநீர் தேங்கி நிற்றது. இதனால், வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.