/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மனைவியை குத்தி கொன்று கணவன் தற்கொலை முயற்சி
/
மனைவியை குத்தி கொன்று கணவன் தற்கொலை முயற்சி
ADDED : மே 07, 2024 12:13 AM

வண்ணாரப்பேட்டை,சென்னை, மூலக்கொத்தளம், பெரிய பாளையத்தம்மன் கோவில் 1வது தெருவைச் சேர்ந்தவர் செல்வம், 55; தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து விருப்ப ஓய்வு பெற்றவர்.
இவரது மனைவி பத்மினி, 52. தம்பதிக்கு மகன், மகள் உள்ளனர். இருவரும், திருமணம் முடிந்து தனித்தனியாக வசிக்கின்றனர்.
செல்வம் தம்பதிக்கு இடையே, அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. வழக்கம்போல, நேற்று பணம் தொடர்பாக இருவருக்கும் இடையே, வாக்குவாதம் ஏற்பட்டுஉள்ளது.
வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த செல்வம், கத்தியை எடுத்து பத்மினியை சரமாரியாக குத்தினார். இதில், பத்மினி ரத்தவெள்ளத்தில் சரிந்தார்.
பின், அதே கத்தியால், செல்வம் வயிற்றில் தன்னைத்தானே குத்திக் கொண்டார். இதில், குடல் சரிந்த நிலையில் பலத்த காயமடைந்தார். பத்மினியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அவரது மகன் பாலாஜிக்கு தகவல் தெரிவித்தனர்.
பாலாஜி விரைந்து வந்து தாய், தந்தை இருவரையும் மீட்டு, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு பத்மினி உயிரிழந்தார். செல்வம் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து, வண்ணாரப்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.