ADDED : மார் 06, 2025 11:47 PM

அடையாறு :அடையாறு, கெனால் பேங்க் சாலையை சேர்ந்தவர் சிவகுமார், 48. பெயின்டர். கடந்த 4ம் தேதி, இவரது வீட்டு முன் இரண்டு மாடுகள் சட்டை போட்டு கொண்டிருந்தன.
சத்தம் போட்டு, துரத்தியும் அவை நகராததால், அருகில் சென்று விரட்ட முயற்சி செய்தார். அப்போது, ஒரு மாடு ஆக்ரோஷமாக சிவகுமாரை முட்டி தள்ளியது. இதில், அவரது வலது கையில் எலும்பு முறிவும், உடலில் காயமும் ஏற்பட்டது.
அரசு மருத்துவமனையில் மாவுக்கட்டு போட்டு, சிகிச்சை பெற்று வருகிறார். பின், 173வது வார்டு சுகாதார அலுவலர் சுவாமிநாதன் தலைமையிலான ஊழியர்கள், சண்டை போட்ட மாடுகள் குறித்து விசாரித்தனர்.
அப்போது, அதே பகுதியை சேர்ந்த ராஜ் என்பவரின் மாடுகள் என தெரிந்தது. உடனே, இரண்டு மாடுகளையும் பிடிக்க முயன்றனர்.
இதற்கு, ராஜ் மற்றும் அவரது உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்து, ஊழியர்களை அடிக்க பாய்ந்தனர்.
இதையடுத்து, அடையாறு போலீசார் பாதுகாப்புடன், இரண்டு மாடுகளையும் சிறை பிடித்து, சிந்தாரிப்பேட்டையில் உள்ள மையத்தில் சேர்த்தனர்.
சிவகுமாருக்கு ஏற்பட்ட காயத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும் என, காவல் துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் ராஜிடம் வலியுறுத்தினர்.