/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
காஞ்சி 'மாஜி' அதிகாரி வீட்டில் அதிரடி 'ரெய்டு'
/
காஞ்சி 'மாஜி' அதிகாரி வீட்டில் அதிரடி 'ரெய்டு'
ADDED : ஆக 07, 2024 12:48 AM

-காஞ்சிபுரம், காஞ்சிபுரம் மாநகராட்சியில், நகரமைப்பு பிரிவில் கட்டட ஆய்வாளராக பணியாற்றியவர் ஷியாமளா. இவர், காஞ்சிபுரத்தில் பணியாற்றிய போது, கட்டட அனுமதிக்கு அதிக அளவில் 'கமிஷன்' பெற்று வந்ததாக ஏராளமான புகார்கள் எழுந்தன.
இந்நிலையில், இரு ஆண்டுகளுக்கு முன் இவர், கன்னியாகுமரிக்கு இடம் மாற்றப்பட்டார். அங்கிருந்து இடமாறுதல் பெற்று, தற்போது திருவண்ணாமலை மாவட்டம், திருவத்திபுரம் நகராட்சியில், கட்டட ஆய்வாளராக பணியாற்றி வருகிறார்.
காஞ்சிபுரம், மண்டி தெருவில் இவரது வீடு அமைந்துள்ளது.
இந்நிலையில், காஞ்சிபுரத்தில் பணியாற்றிய போது, இவர் அதிக அளவு லஞ்சம் பெறுவதாக எழுந்த புகார் காரணமாக, லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். இவரது சொத்து மதிப்பு மற்றும் குடும்ப உறுப்பினர்களின் சொத்துக்கள் குறித்தும் ஆய்வு செய்தனர்.
அதில், இவர் பெயரில் மட்டுமின்றி, கணவர் சேகர் பெயரிலும் பல்வேறு அசையா சொத்துக்களை வாங்கிக் குவித்திருப்பது தெரிந்தது. இவரது கணவர் சேகர், மின்வாரியத்தில் சிவகாஞ்சி பிரிவு மின்பாதை ஆய்வாளராக பணியாற்றி வருகிறார்.
வருமானத்திற்கு அதிகமாக 73.94 லட்சம் ரூபாய் சொத்து சேர்த்ததாக, இருவரது பெயரிலும் காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார், நேற்று முன்தினம் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
நேற்று காலை 6:00 மணியளவில், ஷியாமளா வீட்டில் திடீரென சோதனை நடத்தினர். காலையில் துவங்கிய சோதனை, பிற்பகல் 2:00 மணி வரை நீடித்தது. இதில், 1.37 லட்சம் ரூபாயை, போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரிக்கின்றனர்.