/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கிடப்பில் கிருஷ்ணா நீர் பேச்சு: சென்னை குடிநீர் கையிருப்பு சரிவு
/
கிடப்பில் கிருஷ்ணா நீர் பேச்சு: சென்னை குடிநீர் கையிருப்பு சரிவு
கிடப்பில் கிருஷ்ணா நீர் பேச்சு: சென்னை குடிநீர் கையிருப்பு சரிவு
கிடப்பில் கிருஷ்ணா நீர் பேச்சு: சென்னை குடிநீர் கையிருப்பு சரிவு
UPDATED : ஜூலை 13, 2024 04:10 PM
ADDED : ஜூலை 13, 2024 04:08 PM

சென்னை: சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர் கையிருப்பு சரிந்து வரும் நிலையில், கிருஷ்ணா நீர் பேச்சு கிடப்பில் போடப்பட்டு உள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள புழல், பூண்டி, சோழவரம், செம்பரம்பாக்கம், தேர்வாய் கண்டிகை ஏரிகள், கடலுார் மாவட்டம் வீராணம் ஏரி வாயிலாக சென்னையின் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது. இந்த ஏரிகளின் மொத்த கொள்ளளவு 13.2 டி.எம்.சி., தற்போது, 5.69 டி.எம்.சி., இருப்பு உள்ளது.
அதிகபட்சமாக, புழலில் 2.70 டி.எம்.சி., செம்பரம்பாக்கத்தில் 1.42, வீராணத்தில் 1.06 டி.எம்.சி., இருப்பு உள்ளது. தேர்வாய் கண்டிகையில் 0.30 டி.எம்.சி., சோழவரத்தில் 0.13 டி.எம்.சி., இருப்பு உள்ளது.
இந்த ஏரிகளில் இருந்து சென்னையின் குடிநீர் தேவைக்காக மொத்தமாக வினாடிக்கு 501 கனஅடி நீர் எடுக்கப்படுகிறது. கடந்தாண்டு, இதேநாளில், ஆறு ஏரிகளிலும் சேர்த்து 7.67 டி.எம்.சி., நீர் இருந்தது. தற்போது, அதைவிட 2 டி.எம்.சி., நீர் குறைவாக உள்ளது.
ஒப்பந்தப்படி தமிழகத்திற்கு ஜூலை 1ம்தேதி முதல், கிருஷ்ணா நீரை சாய்கங்கை கால்வாயில் ஆந்திர அரசு திறந்திருக்க வேண்டும். ஆனால், இன்னும் நீர் திறக்கவில்லை. இதனால், பூண்டி ஏரி வறண்டுவிடும் கட்டத்தை எட்டியுள்ளது.
கிருஷ்ணா நீர் தொடர்பான பேச்சுவார்த்தையை நீர்வளத்துறை இன்னும் துவங்கவில்லை. வெளிமாவட்டங்களில் இருந்து பதவி உயர்வு அடிப்படையில், நீர்வளத்துறைக்கு புதிதாக பொறுப்பேற்றுள்ள உயர் அதிகாரிகளுக்கு, இதுகுறித்த விவரங்களை கீழ் உள்ள அதிகாரிகள் இன்னும் தெரிவிக்கவில்லை. இனியாவது, கிருஷ்ணா நீரை பெறுவதற்கான முயற்சிகளை, நீர்வளத்துறை எடுக்க வேண்டிய அவசியம் எழுந்துள்ளது.