/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கொலைக்கு பின் தப்பிய மங்கி குல்லா மர்ம நபர் சரண்
/
கொலைக்கு பின் தப்பிய மங்கி குல்லா மர்ம நபர் சரண்
ADDED : மே 14, 2024 12:33 AM
ஆவடி,
ஆவடி அடுத்து அண்ணனுார், ஸ்ரீ சக்தி நகரைச் சேர்ந்தவர் மாதவன், 65 . ஓய்வு பெற்ற, கப்பல் மெக்கானிக். இவர், வீட்டின் மாடியில் 'வி.எஸ்.எம்., ராயல் மஹால்' என்ற பெயரில், சிறிய பார்ட்டி ஹால் ஒன்றை நடத்தி வந்தார். இவரது, மனைவி சியாமளா, 45. இவர்களுடன் குழந்தை மற்றும் மாமியார் வசிக்கின்றனர்.
கடந்த பிப்., 10ம் தேதி இரவு, 'மங்கி குல்லா' அணிந்த மர்ம நபர் ஒருவர், மாதவன் வீட்டில் நுழைந்து அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின், மறைத்து வைத்திருந்த கத்தியால், மாதவனை தலை, மார்பு, வயிறு உள்ளிட்ட பல இடங்களில் கொடூரமாக வெட்டியுள்ளார். இதில், சம்பவ இடத்திலேயே மாதவன் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதை தடுக்க முயற்சித்த மனைவி சியாமளா, மாமியார் விஜி மோனி,75, மற்றும் மகள் தீக்ஷிதா ஆகியோரை வெட்டி, மர்ம நபர் தப்பிச் சென்றார். இந்த வழக்கு தொடர்பாக எட்டு தனிப்படைகள் அமைத்து திருமுல்லைவாயில் போலீசார் மர்ம நபரை தேடி வந்தனர்.
கடந்த 3 மாதமாக போலீசிடம் சிக்காமல் தப்பி வந்த, திருத்தணியை சேர்ந்த சரவணண்,33, என்பவர் நேற்று மதியம் அம்பத்துார் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கும் போது கொலைக்கான காரணம் குறித்து முழு தகவல் தெரியவரும் என, கருதப்படுகிறது.

