/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
எஸ்.ஐ., மீது நடவடிக்கை கமிஷனர் ஆபீசில் மனு
/
எஸ்.ஐ., மீது நடவடிக்கை கமிஷனர் ஆபீசில் மனு
ADDED : மே 09, 2024 12:11 AM
வேப்பேரி, உரிமைக் குரல் ஓட்டுனர் தொழிற்சங்கத்தைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர், கமிஷனர் அலுவலகத்தில் இலக்கு நிர்ணயம் செய்து, அபராதம் விதிப்பதை கைவிடக் கோரி, நேற்று மனு அளித்தனர்.
அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
சென்னை முழுதும், 500க்கும் மேற்பட்ட சிறு ரக சரக்கு வாகனங்கள் இயங்கி வருகின்றன. அந்த வாகனங்களில் லோடு இல்லாமல் சென்றாலும் அல்லது அனுமதித்த அளவிலான லோடு ஏற்றி சென்றாலும், இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கூறி, போக்குவரத்து எஸ்.ஐ.,க்கள் அபராதம் விதிக்கின்றனர்.
இதனால், ஓட்டுனர்கள் பெரும் மன உளைச்சலுக்கு உள்ளாவதோடு, வாழ்வாதாரம் இழந்தும் தவிக்கின்றனர்.
குறிப்பாக, கொளத்துாரில் பள்ளி நோட்டு புத்தகங்களை ஏற்றிச் சென்ற ஓட்டுனர் செந்தமிழன் எந்தவித விதிமீறலில் ஈடுபடாதபோதும், அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அவருக்கு விதிக்கப்பட்ட அபராதத்தை ரத்து செய்வதோடு, அதிகார துஷ்பிரயோகம் செய்த போக்குவரத்து எஸ்.ஐ.,மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கமிஷனர் அலுவலகம் முன் திடீரென ஓட்டுனர்கள் குவிந்ததால், அசம்பாவிதம் ஏதும் நிகழாமல் இருக்க போலீசார் குவிக்கப்பட்டனர்.