/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரூ.51 லட்சம் நிலமோசடி சாட்சிக்கு போலீஸ் 'காப்பு'
/
ரூ.51 லட்சம் நிலமோசடி சாட்சிக்கு போலீஸ் 'காப்பு'
ADDED : ஆக 08, 2024 12:53 AM

ஆவடி, ஆவடி, கவரைப்பாளையம், பஜனை கோவில் தெருவைச் சேர்ந்தவர் பாலசுப்ரமணியம், 65; ஓய்வு பெற்ற விஞ்ஞானி. இவர், கடந்த 29ம் தேதி, ஆவடி மத்திய குற்றப்பிரிவில் புகார் ஒன்று அளித்திருந்தார்.
அதில் அவர் குறிப்பிட்டிருந்ததாவது:
பட்டாபிராம், மாடர்ன் சிட்டி, போர் ஊர்தி ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவன பணியாளர்கள் கூட்டுறவு வீடு கட்டும் சங்கத்தின் வாயிலாக, கடந்த 2000ம் ஆண்டு, பூந்தமல்லி, தண்டரை கிராமத்தில், 2,340 சதுர அடி நிலத்தை வாங்கினேன்.
கடந்த சில மாதங்களுக்கு முன், மேற்படி இடத்தில் வீடு கட்ட வில்லங்க சான்றை பரிசோதித்தபோது, பரசுராமன் என்பவருக்கு, கடந்த 2023ல் பொது அதிகாரம் கொடுத்தது போன்று, ஆவடி சார் - பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவாகி உள்ளது.
பொது அதிகார ஆவணத்தில், சரவணன், பால்ராஜ் ஆகியோர் சாட்சி கையெழுத்திட்டுள்ளனர்.
பின், கடந்த ஏப்., 2ம் தேதி, பரசுராமன் என்பவர் அவரது மனைவி சகுந்தலா என்பவருக்கு, நிலத்தை கிரையம் செய்தது தெரிந்தது. நிலத்தின் மதிப்பு 51 லட்சம் ரூபாய்.
எனவே, என் நிலத்தை போலி ஆவணங்கள் வாயிலாக விற்றோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிட்டு இருந்தார்.
இது குறித்து விசாரித்த இன்ஸ்பெக்டர் வள்ளி, தனிப்படை அமைத்து தலைமறைவாக இருந்த பட்டாபிராம், செந்தமிழ் நகரைச் சேர்ந்த சரவணன், 53, ஆவடி, ராஜிவ் காந்தி நகரைச் சேர்ந்த பால்ராஜ், 29, ஆகியோரை நேற்று கைது செய்தனர். தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளியான பரசுராமனை தேடி வருகின்றனர்.