/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பெண் மீதான முன்விரோதம் அப்பாவி வாலிபருக்கு வெட்டு
/
பெண் மீதான முன்விரோதம் அப்பாவி வாலிபருக்கு வெட்டு
ADDED : செப் 04, 2024 01:28 AM
எம்.கே.பி.நகர்:வியாசர்பாடி, சத்தியமூர்த்தி நகரைச் சேர்ந்தவர் திலீப்குமார், 19. இவர் நேற்று முன்தினம் இரவு, வியாசர்பாடி முல்லை நகர் அருகே உள்ள 'பங்க்'கில் பெட்ரோல் நிரப்ப, நண்பர் ஸ்ரீகாந்த் என்பவருடன் பைக்கில் வந்தார்.
அங்கு, பைக்கில் ஹெல்மெட் அணிந்திருந்த மர்ம நபர்கள் இருவர், திடீரென கத்தியால் திலீப்குமாரை வெட்டிவிட்டு தப்பினர். படுகாயமடைந்த அவர், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இதுகுறித்து எம்.கே.பி.நகர் போலீசார் விசாரித்தனர்.
இதில், கொடுங்கையூர், எம்.ஜி.ஆர்.நகரைச் சேர்ந்த சந்தியா, 25, இதே பெட்ரோல் பங்க்கில் வேலை செய்து வருகிறார்.
கடந்த ஆக., 26ம் தேதி இவர் பணியில் இருந்த போது, இருவர் வந்து, விரைவாக பெட்ரோல் போடுமாறு கூறியுள்ளனர்.
வரிசையில் வருமாறு சந்தியா கூறியதால், அந்த நபர்கள் அவதுாறாக திட்டியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த சந்தியாவின் கணவர் சூரியபிரகாஷ், இதுகுறித்து போலீசில் புகார் அளித்தார்.
இந்த முன்விரோதம் காரணமாக, சந்தியாவை வெட்ட பெட்ரோல் பங்க்கிற்கு வந்த நபர்கள், அவர் இல்லாததால் திலீப்குமாரை வெட்டியது தெரிந்தது.
தப்பிச் சென்ற மர்ம நபர்களை, போலீசார் தேடி வருகின்றனர்.