/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அரசு வேலை தருவதாக மோசடி கணவன், மனைவிக்கு 'காப்பு'
/
அரசு வேலை தருவதாக மோசடி கணவன், மனைவிக்கு 'காப்பு'
ADDED : மே 26, 2024 12:14 AM

யானைகவுனி, அரியலுார் மாவட்டம், வாலாஜா நகரை சேர்ந்தவர் தினேஷ்குமார், 26. இவர் தனக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்ணிற்கு அரசு வேலை வாங்கும் ஆசையில், தனக்கு அறிமுகமான மோகன், 47 என்பவரிடம் ஒன்பது லட்சம் ரூபாயை கொடுத்துள்ளார்.
பேசிய படி, தினேஷ்குமாரிடம் அவரது மனைவிக்கு அரசு வேலை கொடுப்பதற்கான பணி நியமன ஆணையை, மோகன் வழங்கி உள்ளார். அதை எடுத்துக் கொண்டு வேலையில் சேர சென்ற போது, அது போலி பணி நியமன ஆணை என்பது தெரியவந்தது. இதுகுறித்து யானைகவுனி காவல் நிலையத்தில் தினேஷ் குமார் புகார் அளித்தார்.
போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணகி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், சென்னை, மின்ட் தெருவில் உள்ள தனியார் விடுதியில் தங்கி, பெண் உட்பட இருவர், போலியான அரசு பணி நியமன ஆணைகளை தயாரித்து, மோசடியில் ஈடுபட்டு வருவது தெரியவந்தது. மோசடியில் ஈடுபட்ட ஈரோடு, குறிகரன்பாளையத்தை சேர்ந்த மோகன், அவரது மனைவி கவுசல்யா, 35 ஆகிய இருவரையும் போலீசார் நேற்று கைது செய்தனர். அவர்களிடம் இருந்த 1.47 லட்சம் ரூபாய், ஒரு மடிக்கணினி, 49 போலி அரசு முத்திரைகள், 36 போலி அரசு பணி நியமன ஆணைகள், ஆதிதிராவிட நலத்துறை, ஹிந்து சமய அறநிலையத் துறை, பொதுப்பணி துறை, மக்கள் நல்வாழ்வு துறை உள்ளிட்ட துறைகளில், எட்டு போலி அரசு அடையாள அட்டைகள் உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில்,
போலீசார் கூறியதாவது:
திருப்பூர் மாவட்டத்தில், மோகன் துணி நிறுவனம் நடத்தி வந்துள்ளார். தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக அந்த தொழிலில் விலகினார். பின், அரசு துறைகளில் கிளார்க், அலுவலக உதவியாளர் உள்ளிட்ட வேலை வாங்கி தருவதாக கூறி, லட்சக்கணக்கில் பணம் பெற்று, போலியான பணி நியமன ஆணைகளை கொடுத்து ஏமாற்றி வந்துள்ளார். அடிக்கடி இடம் மாற்றும் மோகன், தற்போது, மின்ட் தெருவில் உள்ள தனியார் விடுதியை கடந்த இரு ஆண்டுகளாக லீசுக்கு எடுத்து நடத்தி வந்துள்ளனர்.
மூன்று ஆண்டுகளாக இந்த மோடியில் ஈடுபட்டு வந்துள்ளனர். இவ்வழக்கில் தலைமறைவான மேலும் ஒருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.
இவ்வாறு போலீசார் கூறினர்.