/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
குவாரிக்கு எதிர்ப்பு: தொடரும் போராட்டம்
/
குவாரிக்கு எதிர்ப்பு: தொடரும் போராட்டம்
ADDED : மார் 02, 2025 12:42 AM

கும்மிடிப்பூண்டி, கும்மிடிப்பூண்டி அருகே கரடிபுத்துார் கிராமத்தில், 7.58 ஏக்கரில் அரசு புறம்போக்கு நிலம் உள்ளது. அந்த நிலத்தில், சென்னை உள்வட்ட சுற்றுச்சாலை திட்ட பணிக்காக, கிராவல் மண் எடுக்க தனியார் நிறுவனத்திற்கு குவாரி விடப்பட்டது.
கிராமத்தின் வளம் சூறையாடப்படுவதாக தெரிவித்து, 'கரடிபுத்துார் கிராமத்தில் குவாரி விடக்கூடாது' என, கிராம சபை மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
குவாரியை ரத்து செய்து, அந்த இடத்தில் வீடு இல்லாத கிராமவாசிகளுக்கு வீட்டுமனை ஒதுக்கி தர வேண்டும் என, கலெக்டருக்கு மனு அளிக்கப்பட்டது.
நடவடிக்கை எடுக்கப்படாததால், கடந்த 28ம் தேதி ரேஷன், வாக்காளர் மற்றும் ஆதார் அட்டைகளை வி.ஏ.ஓ.,விடம் ஒப்படைத்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நேற்று மக்கள் எதிர்ப்பை மீறி, பலத்த போலீஸ் பாதுகாப்புடன், குவாரி பணிகள் துவங்கப்பட்டன.
அதிருப்தியடைந்த கிராமவாசிகள், வி.ஏ.ஓ., அலுவலகம் முன் பந்தலிட்டு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.