/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மாணவர் வேகமாக ஓட்டிய பைக் மோதி காவலாளி பலி
/
மாணவர் வேகமாக ஓட்டிய பைக் மோதி காவலாளி பலி
ADDED : பிப் 25, 2025 01:03 AM
மறைமலை நகர், நந்திவரம் - கூடுவாஞ்சேரி மேட்டுத்தெருவைச் சேர்ந்தவர் ராஜா, 39. மறைமலை நகர் சிப்காட் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலை ஒன்றில், காவலாளியாக பணிபுரிந்து வந்தார்.
நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து, சைக்கிளில் வீட்டிற்கு சென்றார். மறைமலை நகர் நகராட்சி அலுவலகம் எதிரே, ஜி.எஸ்.டி., சாலையைக் கடக்க முயன்றபோது, தாம்பரம் மார்க்கமாக அதிவேகமாக வந்த கே.டி.எம்., பைக், ராஜா மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் பலியானார்.
கே.டி.எம்., இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த, ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த யாஷ் சர்மா, 23, பின்னால் அமர்ந்து வந்த ஆதித்யன், 22, ஆகியோர் காயமடைந்தனர்.
அங்கிருந்தோர் இருவரையும் மீட்டு, பொத்தேரியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த மறைமலை நகர் போலீசார், ராஜாவின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து, தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர். விபத்து ஏற்படுத்திய இருவரும் கல்லுாரி மாணவர்கள் என்பது தெரிய வந்தது. போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.
தாம்பரம் சிறுமி காயம்
மேற்கு தாம்பரம், கல்யாண சுந்தரம் தெருவில் நேற்று முன்தினம் இரவு விளையாடி கொண்டிருந்த சிறுமி மீது, அதிவேகமாக சென்ற இருசக்கர வாகனம் மோதியது. இதில், படுகாயமடைந்த சிறுமியை, அங்கிருந்தவர்கள் மீட்டு குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். விபத்தில், சிறுமியின் இரண்டு கால்களிலும் எலும்பு முறிவு ஏற்பட்டது. விபத்துகளை தடுக்க, வாகனங்களை அதிவேகமாக ஓட்டுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.