/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
எம்.எல்.ஏ., மீது லஞ்சம் கேட்டதாக வழக்கு
/
எம்.எல்.ஏ., மீது லஞ்சம் கேட்டதாக வழக்கு
ADDED : செப் 15, 2024 12:25 AM

செய்யூர், செப். 15-
சாலை அமைக்கும் திட்டத்தில் லஞ்சம் கேட்டதாக தொடரப்பட்ட வழக்கில், செய்யூர் தொகுதி வி.சி., - எம்.எல்.ஏ., பாபு உள்ளிட்டோர் பதிலளிக்க, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம், சித்தாமூர் அருகே புத்திரன்கோட்டை - மாம்பாக்கம் இடையே, 2.3 கி.மீ., நீள சாலை உள்ளது.
இதை அகரம், ஈசூர், புத்திரன்கோட்டை உள்ளிட்ட கிராமத்தினர் பயன்படுத்தி வருகின்றனர்.
இச்சாலை, புழுதி பறக்கும் வகையில் மோசமான நிலையில் இருந்தது. சாலையை சீரமைக்க, அப்பகுதிவாசிகள் தொடர்ந்து வலியுறுத்தினர்.
இதையடுத்து, 'நபார்டு' வங்கி நிதி 3.70 கோடி ரூபாயில், சாலை சீரமைப்பு பணியை, கடந்தாண்டு இறுதியில், நெடுஞ்சாலை துறை துவக்கியது. கடந்த ஆகஸ்டில் சாலை பணி திடீரென நிறுத்தப்பட்டது.
இந்நிலையில், சாலை பணியை செய்யவிடாமல், செய்யூர் வி.சி., - எம்.எல்.ஏ., பாபு, புத்திரன்கோட்டை ஊராட்சி தலைவர் நிர்மல்குமார் மற்றும் மாம்பாக்கம் ஊராட்சி தலைவரின் கணவர் ராமையா ஆகியோர், லஞ்சம் கேட்டு மிரட்டுவதாக, ஒப்பந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ரவிக்குமார், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு, நீதிபதி ஜெயச்சந்திரன் முன் விசாரணைக்கு வந்தது. மனு குறித்து பதிலளிக்க, எம்.எல்.ஏ., பாபு, நிர்மல்குமார், ராமையா ஆகியோருக்கு, நீதிபதி உத்தரவிட்டார்.