/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தேர்தல் பணியில் திருவொற்றியூர் 'டாப்'
/
தேர்தல் பணியில் திருவொற்றியூர் 'டாப்'
ADDED : ஜூன் 12, 2024 12:32 AM

திருவொற்றியூர், வடசென்னை லோக்சபா தொகுதியில் அடங்கிய திருவொற்றியூர் சட்டசபை தொகுதியில், 311 ஓட்டுச்சாவடிகள் உள்ளன. இதில், பதிவான ஓட்டுகள் சென்னை, ராணி மேரி கல்லுாரியில் எண்ணப்பட்டன.
ஓட்டு எண்ணிக்கையின் போது, அதிக ஓட்டுச்சாவடிகள் கொண்ட திருவொற்றியூர் சட்டசபை தொகுதியில், ஓட்டு எண்ணிக்கை படுவேகமாக நடைபெற்றது.
மற்ற சட்டசபை தொகுதிகளை காட்டிலும், திருவொற்றியூர் சட்டசபை தொகுதியில் விரைவாகவும், பதிவான ஓட்டுகள் முழுமையாகவும் எண்ணி முடிக்கப்பட்டன.
இந்நிலையில், ஓட்டு எண்ணிக்கை பணியில் சிறப்பாக பணியாற்றிய, திருவொற்றியூர் தொகுதியில் அடங்கிய மண்டலம் 1 மற்றும் மண்டலம் 2 பணியாளர்களை கவுரவிக்கும் நிகழ்ச்சி நேற்று மதியம் நடந்தது.
இதில், திருவொற்றியூர் மண்டல குழு தலைவர் தனியரசு, உதவி கமிஷனர் நவேந்திரன், உதவி செயற்பொறியாளர் பாபு, மணலி செயற்பொறியாளர் தேவேந்திரன் ஆகியோர் பங்கேற்று, சிறப்பாக பணியாற்றிய ஊழியர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி கவுரவித்தனர்.
பின், உதவி கமிஷனர் நவேந்திரன் பேசியதாவது:
அதிக ஓட்டுச்சாவடிகள் கொண்ட திருவொற்றியூர் சட்டசபை தொகுதியில், 311 ஓட்டுச்சாவடிகள் உள்ளன. இருப்பினும், விரைவாக ஓட்டுகளை எண்ணி முடிவுகள் அறிவிக்கப்பட்டதில், ஊழியர்களின் பணி பாராட்டுக்கு உரியது.
மிக்ஜாம் புயலின் போது, செயல்பட்டதை காட்டிலும் சிறப்பாகவும், நேர்மையாகவும் தேர்தல் பணிகளை செய்து முடித்தோம்.
இவ்வாறு அவர் பேசினார்.