ADDED : ஏப் 12, 2024 12:20 AM
சென்னை, ஈ.வெ.ரா., சாலையில், இரண்டு நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை மாநகர போக்குவரத்து போலீசார் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
ஈ.வெ.ரா., சாலையில், டாக்டர் நாயர் மேம்பாலம் கீழ்ப்பகுதியில், வடக்கு பக்கம் மற்றும் மேம்பாலம் குறுக்கே, நாயர் பாயின்ட் சிக்னல் பகுதியில், வரும் 13 மற்றும் 14ம் தேதி, மழைநீர் கால்வாய் கட்டுமான பணிக்காக, இரவு 10:00 மணியில் இருந்து பள்ளம் தோண்டப்படுகிறது.
இதையொட்டி, ஈ.வெ.ரா., சாலையில், ஈ.வி.கே., சம்பத் சாலை சிக்னல் மற்றும் தாசபிரகாஷ் சிக்னலில் இருந்து, டாக்டர் நாயர் மேம்பாலம் வழியாக எழும்பூர் நோக்கி, வாகனங்கள் செல்ல இயலாது.
அத்தகைய வாகனங்கள், நாயர் பாயின்ட் சிக்னலில் இருந்து, நேராக ஈ.வெ.ரா., சாலை, ரித்தர்டன் சாலை சிக்னல், ஈ.வி.கே., சம்பத் சாலை சிக்னல் மற்றும் காந்தி இர்வின் பாயின்ட் சிக்னல் வலதுபுறம் திரும்பி, காந்தி இர்வின் மேம்பாலம் வழியாக செல்லலாம்.
எழும்பூர் காந்தி இர்வின் சாலை மற்றும் உடுப்பி பாயின்ட் காவல் ஆணையர் சாலை சிக்னலில் இருந்து, டாக்டர் நாயர் மேம்பாலம் வழியாக, ஈ.வெ.ரா., சாலை நோக்கி செல்லக்கூடிய வாகனங்கள், டாக்டர் நாயர் மேம்பாலத்தின் வழியாக செல்லலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

