ADDED : ஜூலை 09, 2024 12:37 AM
சென்னை, கீழ்ப்பாக்கம் குடிநீர் வாரியத்தின் பயிற்சி மையத்தில், தொழில் முனைவோர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ள, 213 துாய்மை பணியாளர்களுக்கு, நவீன இயந்திரங்களை கையாளுவதற்கான பயிற்சி வகுப்பு நேற்று நடந்தது.
இப்பயிற்சி வகுப்பை, சென்னை குடிநீர் வாரியத்தின் மேலாண்மை இயக்குனர் டி.ஜி.வினய் துவக்கி, கூறியதாவது:
துாய்மை பணியாளர்களை தொழில் முனைவோர்களாக மாற்றும் முயற்சிக்கான வழிகாட்டுதலில், தலித் இந்திய வர்த்தக மற்றும் தொழிற்சங்கத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது.
அதில், இறந்த துாய்மை பணியாளர்களின் வாரிசுதாரர்கள், துாய்மை பணியாளர்களின் சமூக பொருளாதார நிலையை மேம்படுத்த, தகுதியானவர்களை கண்டறிந்து அவர்களுக்கு, நவீன கழிவுநீர் அகற்று வாகனத்திற்கான கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.
இதற்கான பயிற்சி அளிக்கப்பட்டு, வாழ்வாதாரம் மேம்படுத்தப்பட்டு உள்ளது.
இவ்வாறு வினய் கூறினார்.