ADDED : மே 25, 2026 05:31 PM
பேசின்பாலம்: சாலையில் நடந்து சென்றவரிடம் மொபைல் போன் பறித்த வாலிபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
புளியந்தோப்பை சேர்ந்தவர் ராஜா, 58. ராயப்பேட்டையில் உள்ள தனியார் வங்கியில் அலுவலக உதவியாளராக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு பேசின்பாலம் சாலை வழியாக ரயில் நிலையம் நோக்கி நடந்து சென்றார். அப்போது எதிரே பைக்கில் வைத்த இருவர், ராஜா சட்டைப்பையில் இருந்த 12,000 ரூபாய் மதிப்புள்ள மொபைல்போனை பறித்துச் சென்றனர். இதுகுறித்து ராஜா பேசின்பாம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் மர்மநபர்களை தேடி வருகின்றனர்.
காதல் தோல்வியால் வாலிபர் தற்கொலை
பெரம்பூர், மே 26-
காதல் தோல்வியால் கல்லுாரி மாணவர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பெரம்பூர் பட்டேல் சாலை பகுதியை சேர்ந்தவர் ராஜசேகர். இவரது மகன் கவுதம், 20. இவர் தனியார் கல்லுாரியில் 3ம் ஆண்டு படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு வீட்டில் உள்ளோர் உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சி அரும்பாக்கம் சென்றனர். வீட்டில் கவுதம் மட்டும் தனியாக இருந்தவர், படுக்கை அறையில் துாக்கிட்டு இறந்து கிடந்துள்ளார். இரவு 9:30 மணியளவில் குடும்பத்தினர் வந்து பார்த்த போது, கவுதம் துாக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்துள்ளார்.
அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்த போது கவுதம் இறந்தது உறுதி செய்யப்பட்டது. தகவலின் பேரில் செம்பியம் போலீசார் கவுதமின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
முதற்கட்ட விசாரணையில், கவுதம், கடந்த ஐந்தாண்டுகளாக ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். கடந்த ஆறு மாதமாக அப்பெண் பேசுவதை நிறுத்தி விட்டார். இதில் மனஉளைச்சலில் இருந்தவர் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
ரவுடி தற்கொலை
புளியந்தோப்பு, மே 26-
போதையில் ரவுடி துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
புளியந்தோப்பு, வ.உ.சி., நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் ஜோதிரஞ்சன், 25. நான்கு ஆண்டுகளுக்கு முன் லுார்துமேரி என்பவரை திருமணம் செய்தார். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.
மது போதைக்கு அடிமையாஜ ஜோதிரஞ்சன் ரவுடியாகவும் வலம் வந்தார்.
நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் மாடியில் துாங்கச் சென்றவர் அதிகாலை 4:00 மணியளவில் பார்த்த போது ஜன்னல் கம்பியில் நைலான் புடவையால் துாக்கிட்டு இறந்து கிடந்தார். அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்த போது, இறந்தது உறுதி செய்யப்பட்டது. தகவலின் பேரில் புளியந்தோப்பு போலீசார் விசாரிக்கின்றனர்.
மது விற்ற இருவர் கைது
எழும்பூர், மே 26–
சட்டவிரோதமாக மதுபாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வந்த, பழைய குற்றவாளி உட்பட இருவரை போலீசார் கைது செய்தனர்.
எழும்பூர் போலீசார் நேற்று அதிகாலை புதுப்பேட்டை, அய்யா சாமி தெருவில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இரண்டு நபர்கள் சட்டவிரோதமாக கூடுதல் விலைக்கு மதுபாட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இருவரை கையும் களவுமாக மடக்கி பிடித்த போலீசார் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர்.
விசாரணையில், அதேபகுதியைச் சேர்ந்த விஷ்ணு, 30, சாந்தகுமார், 18 என்பது தெரியவந்தது. இருவரை கைது செய்த போலீசார், 16 குவாட்டர் பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்ட விஷ்ணு எழும்பூர் காவல் நிலைய பழைய குற்றவாளி என்பதும், 11 குற்ற வழக்குகள் இருப்பதும் விசாரணையில் தெரியவந்தது.
மின்சாரம் பாய்ந்து
ஊழியர் படுகாயம்
பெரம்பூர், மே 26-–-
குடிநீர் வாரிய ஒப்பந்த ஊழியர், மின்சாரம் பாய்ந்து பலத்த காயமடைந்தார்.
அரியலுார் மாவட்டத்தைச் சேர்ந்தவர் செந்தில்குமார், 42. இவர், குடிநீர் வாரியத்தில் ஒப்பந்த ஊழியராக, பெரம்பூருக்கு உட்பட்ட, 71வது வார்டில் பணிபுரிகிறார்.
பெரம்பூர் பி.பி., சாலையில் வாரிய அலுவலகத்தில், நேற்று அதிகாலை மின்சாரம் தடைபட்டது. இதையடுத்து, அதிகாலை 4:30 மணியளவில், வாரிய அலுவலகத்தின் பக்கத்தில் இருந்த டிரான்ஸ்பார்மர் மீது செந்தில்குமார் ஏறி பார்த்துள்ளார். அப்போது மின்சாரம் பாய்ந்தது, செந்தில்குமாரின் வலது கை மணிக்கட்டு வரை துண்டாகி உடலில் தீப்பற்றியது. சக ஊழியர்கள் உதவியுடன் ‘108’ ஆம்புலன்ஸ் மூலம் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஆட்டோ
எரிந்து நாசம்
சேலையூர், மே 26–
கிழக்கு தாம்பரம், வினோபா நகரைச் சேர்ந்தவர் சசிகுமார், 50; ஆட்டோ ஓட்டுநர். இவர், நேற்று முன்தினம் இரவு, வழக்கம்போல வீட்டு வாசலில் ஆட்டோவை நிறுத்தி சென்றார்.
நள்ளிரவில், ஏதோ தீப்பற்றி எரிவது போல் சத்தம் கேட்டு, சசிகுமார் வெளியே வந்து பார்த்தபோது, ஆட்டோ தீப்பற்றி பார்த்து அதிர்ச்சியடைந்தார். பின், தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்து, அக்கம் பக்கத்தினருடன் சேர்ந்து தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். இந்த விபத்தில், ஆட்டோ முழுதும் எரிந்து நாசமானது. சேலையூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
