/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அடுத்தடுத்து விபத்து ரயிலில் அடிபட்டு இருவர் பலி
/
அடுத்தடுத்து விபத்து ரயிலில் அடிபட்டு இருவர் பலி
ADDED : ஆக 01, 2024 12:43 AM
ஆவடி, கொருக்குப்பேட்டை, சத்தியமூர்த்தி நகர் பிரதான சாலையைச் சேர்ந்தவர் மாதவன், 50. இவருக்கு மனைவி, மகள் மற்றும் மகன் உள்ளனர். குடும்ப தகராறு காரணமாக, சில மாதங்களுக்கு முன் அவரது மனைவி கோபித்துக் கொண்டு, சொந்த ஊரான மகள் மற்றும் மகனுடன் ஆந்திர மாநிலம் சென்றனர்.
மாதவன், ஆவடி அடுத்த வேப்பம்பட்டில் உள்ள தம்பி ஜெயராம் வீட்டில் தங்கி, கொத்தனார் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு, மது போதையில் ஆவடி ரயில் நிலையத்தில், முதல் நடைமேடையில் படுத்து உறங்கியுள்ளார். இந்நிலையில், நேற்று காலை ஆவடி ரயில் நிலையத்தில், 'எல்.சி., கேட் 2' அருகே ரயிலில் அடிபட்டு இறந்து கிடந்தார்.
விசாரணையில், அண்ணனுார் ஷெட்டில் இருந்து ஆவடி வந்த ரயிலில் அடிபட்டு இறந்தது தெரிந்தது.
ஆவடி ரயில்வே போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.
அதேபோல், ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தைச் சேர்ந்தவர் மண்டி சிரஞ்சீவி, 43. இவர், குடும்பத்துடன் திருவொற்றியூர் அடுத்த எர்ணாவூர் பகுதியில் தங்கி, கொத்தனார் வேலை பார்த்து வந்துள்ளார்.
நேற்று முன்தினம் இரவு, எர்ணாவூர் - விம்கோ நகர் இடையேயான தண்டவாளத்தை கடக்க முயன்ற போது, மண்டி சிரஞ்சீவி, ரயில் மோதி பலியானார்.
கொருக்குப்பேட்டை ரயில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.