/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கொளத்துாரில் முதல்வர் ஸ்டாலின் மாணவர்களுக்கு நலத்திட்ட உதவி
/
கொளத்துாரில் முதல்வர் ஸ்டாலின் மாணவர்களுக்கு நலத்திட்ட உதவி
கொளத்துாரில் முதல்வர் ஸ்டாலின் மாணவர்களுக்கு நலத்திட்ட உதவி
கொளத்துாரில் முதல்வர் ஸ்டாலின் மாணவர்களுக்கு நலத்திட்ட உதவி
ADDED : ஆக 01, 2024 12:32 AM
சென்னை,சென்னை, கொளத்துார், எவர்வின் பள்ளி வளாகத்தில், கபாலீஸ்வரர் கலை அறிவியல் கல்லுாரி மாணவ, மாணவியருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
அதில், 748 மாணவ, மாணவியருக்கு கல்விக் கட்டணம் தலா 10,000 ரூபாய், கல்வி உபகரணங்களுடன் கூடிய புத்தகப் பை ஆகியவற்றை முதல்வர் வழங்கினார்.
மேலும், மூன்று உதவிப் பேராசிரியர்கள், ஒரு உடற்கல்வி இயக்குனர், ஒரு கண்காணிப்பாளர் பணியிடத்திற்கான, பணி நியமன ஆணைகளை வழங்கினார். கொளத்துார் எம்.எல்.ஏ., அலுவலகத்தில், உதவி கோரி மனுக்கள் அளித்த, 147 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் முதல்வர் வழங்கினார்.
அனிதா அச்சீவர்ஸ் அகாடமியில் பயிற்சி முடித்த மாணவ, மாணவியருக்கு லேப்டாப், தையல் இயந்திரங்கள், மூக்குக் கண்காணடிகள் ஆகியவற்றை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் பொன்முடி, சேகர்பாபு, சென்னை மேயர் பிரியா, எம்.பி.,க்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில், முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
கொளத்துார் தொகுதியில் விரைவில் புதிய தாலுகா அலுவலகம், காவல் துணை ஆணையர் அலுவலகம், புதிய காவல் நிலையம், தீயணைப்பு நிலையம், சார் பதிவாளர் அலுவலகம் அமைய உள்ளன. அனைத்து எம்.எல்.ஏ.,க்களிடமும் அவர்கள் தொகுதியில் நிறைவேற்ற வேண்டிய, 10 திட்டங்கள் கேட்டு பெறப்பட்டன. அதில், எதை உடனடியாக நிறைவேற்ற முடியுமோ, அதை இந்த ஆண்டுக்குள் நிறைவேற்ற உள்ளோம்.
எந்த விருப்பு, வெறுப்பு இல்லாமல், எதிர்க்கட்சியினர் தொகுதிகளுக்கும் முக்கியத்துவம் தந்து, திட்டங்களை செயல்படுத்தும் ஆட்சிதான் திராவிட மாடல் ஆட்சி.
இதுவரை, 1,921 கோவில்களில் குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது. கோவிலுக்கு சொந்தமான 6,147 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை மீட்டுள்ளோம்.
அறநிலையத் துறை, அறிவுத் துறையாகவும் செயல்படுகிறது.
அரசு ஏற்படுத்தி தரும் வாய்ப்புகளை பயன்படுத்தி, தமிழக மாணவர்கள் முன்னேற வேண்டும். பட்டங்களோடு சேர்த்து, அனைத்து திறமைகளும் கொண்டவர்களாக வளர வேண்டும்.
உடல் ஆரோக்கியமாக இருந்தால்தான் படிக்க முடியும்; திறமைகளை வளர்த்துக் கொள்ள முடியும். எனவே, மாணவர்களும், இளைஞர்களும் கல்வியுடன், விளையாட்டு, உடற்பயிற்சி ஆகியவற்றிலும் கவனம் செலுத்த வேண்டும்.
இவ்வாறு முதல்வர் பேசினார்.
சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில், கொளத்துார் ஜெகந்நாதன் தெருவில், 17.50 கோடி ரூபாயில் கட்டப்படும், ரத்த சுத்திகரிப்பு மற்றும் மறுவாழ்வு மையம்; 2.50 கோடி ரூபாயில், கட்டணம் செலுத்தி பயன்படுத்தப்படும் அலுவலக வளாகம் கட்டும் பணி நடக்கிறது. இவற்றை முதல்வர் பார்வையிட்டார்.