ADDED : டிச 15, 2024 12:14 AM
அரும்பாக்கம், அரும்பாக்கம், என்.எஸ்.கே., நகரைச் சேர்ந்தவர் ஜெகதீசன், 36; தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி காயத்ரி, 34. இவர்களுக்கு, 5வயதில் மகளும், கிருபா ஸ்ரீ என்ற 10 மாத பெண் குழந்தையும் இருந்தனர்.
நேற்று முன்தினம் இரவு, வழக்கம்போல் கிருபாஸ்ரீக்கு காயத்ரி தாய்பால் கொடுத்து, அறையில் துாங்க வைத்துள்ளார். ஒரு மணி நேரத்திற்கு பின் பார்த்தபோது, குழந்தை அசைவின்றி கிடந்து உள்ளது.
அதிர்ச்சியடைந்த பெற்றோர், குழந்தையை மீட்டு எழும்பூர் அரசு குழந்தை நல மருத்துவமனையில் சேர்த்தனர். மருத்துவ பரிசோதனையில், குழந்தை மூச்சுத் திணறி இறந்ததாக டாக்டர்கள் கூறியுள்ளனர்.
அரும்பாக்கம் போலீசார் குழந்தையின் உடலை மீட்டு விசாரித்தனர். முதற்கட்ட விசாரணையில், கடந்த பிப்ரவரியில் கிருபாஸ்ரீ பிறந்த போது, 'சிக்குன்குனியா' நோயால் பாதிக்கப்பட்டு, இரண்டு மாதம் எழும்பூரில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. உடல் நிலை தேறி வந்த நிலையில், கடந்த ஒரு வாரமாக குழந்தைக்கு சளி பிரச்னை இருந்துள்ளது.
அதற்காக மீண்டும், எழும்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். நேற்று முன்தினம் தாய் பால் குடித்துவிட்டு துாங்கிய குழந்தை, மூச்சுத் திணறல் ஏற்பட்டு இறந்தது விசாரணையில் தெரிய வந்தது.