/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
ஜுவல்லரியில் திருட முயற்சி 100 சவரன் நகை தப்பியது
/
ஜுவல்லரியில் திருட முயற்சி 100 சவரன் நகை தப்பியது
PUBLISHED ON : நவ 05, 2025 12:00 AM
படப்பை: லாக்கரை உடைக்க முடியாததால், நகைக்கடையில் புகுந்த மர்ம நபர்கள் ஏமாற்றத்துடன் தப்பினர். அதனால், அதிலிருந்த 100 சவரன் நகை தப்பியது.
குரோம்பேட்டையை சேர்ந்தவர் இம்தாரன், 34. இவர், படப்பை அருகே மாடம்பாக்கம் - ஒரத்துார் சாலை, நீலமங்கலம் பகுதியில் நகை விற்பனை மற்றும் அடகு கடை நடத்தி வருகிறார்.
நேற்று காலை வழக்கம் போல் கடையை திறக்க சென்றார். அப்போது, கடையின் பூட்டு மர்ம நபர்களால் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். மணிமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் விசாரித்தனர்.
பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள், 100 சவரனுக்கும் மேல் நகை வைக்கப்பட்டிருந்த லாக்கரை உடைக்க முடியாததால், அதை விட்டு சென்றதும், மேலும் போலீசாரிடம் சிக்காமல் இருக்க, கடையில் இருந்த இரண்டு கண்காணிப்பு கேமராக்களை திருடி சென்றதும் தெரிய வந்தது.
கைரேகை மற்றும் கண்காணிப்பு கேமரா காட்சிகளை சேகரித்த போலீசார், நகையை திருட முயன்றவர்களை தேடி வருகின்றனர்.

