ADDED : மார் 28, 2026 05:02 AM
சென்னை: நடைபயிற்சியில் ஈடுபட்ட 10ம் வகுப்பு மாணவி, திடீரென உடல் நலக்குறைவு ஏற்படவே மருத்துவமனைக்கு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார்.
தேனாம்பேட்டை, கணேஷ்புரத்தைச் சேர்ந்தவர் அர்ஷிதா, 14. இவர், தி.நகரில் உள்ள தனியார் பள்ளியில், 10ம் வகுப்பு படித்து வந்தார். தடகள வீராங்கனையான இவர், மூன்று நாட்களுக்கு முன் நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் குத்துச்சண்டை கிளப்பில் சேர்ந்தார்.
நேற்று காலை அவரது அண்ணன் நவீனுடன் குத்துச் சண்டை பயிற்சிக்கு சென்றார். அங்கு நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்த அர்ஷிதாவிற்கு, தலைவலி அதிகமானதால் அவரது அண்ணனுடன் தேனாம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றார்.
அங்கு அர்ஷிதா மயக்கம் வருவதாக கூறி வாந்தி எடுத்ததை தொடர்ந்து, ராயப்பேட்டை அரசு மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு, மருத்துவ பரிசோதனையில் வரும் வழியிலேயே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து நுங்கம்பாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.
