/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
குடியரசு தின விழாவில் 172 பேருக்கு பதக்கம் வழங்கி பாராட்டு
/
குடியரசு தின விழாவில் 172 பேருக்கு பதக்கம் வழங்கி பாராட்டு
குடியரசு தின விழாவில் 172 பேருக்கு பதக்கம் வழங்கி பாராட்டு
குடியரசு தின விழாவில் 172 பேருக்கு பதக்கம் வழங்கி பாராட்டு
ADDED : ஜன 27, 2026 05:41 AM

சென்னை: குடியரசு தினத்தை முன்னிட்டு, சென்னை மாநகராட்சியில் சிறப்பாக பணியாற்றிய, 172 பேருக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
நாட்டின் 77வது குடியரசு தின விழா, சென்னையின் பல இடங்களில் நேற்று, கோலாகலமாக கொண்டாடப்பட்டது. சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை வளாகத்தில், மேயர் பிரியா தேசிய கொடி ஏற்றி, மரியாதை செலுத்தினார்; தொடர்ந்து மூவர்ண பலுான்களை பறக்க விட்டார்.
தேசிய மாணவர் படையினர், சாரண - சாரணியரின் அணிவகுப்பு மரியாதை ஏற்றதுடன், பள்ளி மாணவ - மாணவியரின் கலை நிகழ்ச்சிகளையும் பார்வையிட்டார்.
மேலும், மாநகராட்சிக்கு முறையாக சொத்து வரியை உரிய காலங்களில், தாமதமில்லாமல் செலுத்தியவர்கள் மற்றும் அதிக சொத்து வரி செலுத்தியவர்களை கவுரவிக்கும் வகையில், சொத்து உரிமையாளர்களுக்கு பாராட்டு கடிதங்களை வழங்கினார்.
மாநகராட்சியில் சிறப்பாக பணியாற்றிய, 172 அலுவலர்கள் மற்றும் பணியாளர்களை பாராட்டி சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களையும் வழங்கினார். நிகழ்ச்சியில் துணை மே யர் மகேஷ்குமார், மாநகராட்சி கமிஷனர் குமரகுருபரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அதேபோல், சென்னை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த விழாவில், கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தேசிய கொடியை ஏற்றி, காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
பின் தாட்கோ , மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர், துாய்மை பணியாளர் நல வாரியம், பிற்படுத்தப்பட்டோர் உள்ளிட்ட துறை வாயிலாக மொத்தம், 40 பயனாளிகளுக்கு, 28 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
தொடர்ந்து பள்ளிக்கல்வித் துறை, அரசு பல்வேறு துறைகளில் சிறப்பாகப் பணியாற்றிய, 310 அலுவலர்களுக்கு, பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
சென்னை உயர் நீதிமன்றத்தில் நேற்று நடந்த, 77வது குடியரசு தின விழாவில், தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா, தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். விழாவில், உயர் நீதிமன்றத்தில், 25 ஆண்டுகள் பணி காலம் பூர்த்தி செய்த நீதிமன்ற பணியாளர்கள், ஓட்டுனர்களுக் கு சான்றிதழ், ரொக்கப் பரிசு வழங்கி பாராட்டினார்.
தாம்பரம் மாநகராட்சியில் நடந்த நிகழ்ச்சியில், மேயர் வசந்தகுமாரி தேசிய கொடியை ஏற்றி, மாநகராட்சியில் சிறப்பாக பணிபுரிந்த, 25 துாய்மை பணியாளர்களுக்கு நற்சான்றிதழ் வழங்கினார். ஆவடி மாநகராட்சி அலுவலகத்தில், ஆவடி மாநகராட்சி மேயர் உதயகுமார் தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். சேலையூர் அடுத்த பதுவஞ்சேரி ஆயுதப்படை வளாகத்தில், தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ், தேசிய கொடிஏற்றினார்.
ஆவடி ஆயுதப்படை மைதானத்தில் நடந்த விழாவில், ஆவடி போலீஸ் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்ஹா, தேசிய கொடி ஏற்றி, மரியாதை செலுத்தினார்.
சென்னை குடிநீர் வாரிய தலைமை அலுவலகத்தில், மேலாண்மை இயக்குனர் வினய், தேசிய கொடியேற்றினார். பின், 25 ஆண்டுகளாக எந்த புகாரும் இல்லாமல் சிறப்பாக பணியாற்றிய, 25 பேருக்கு, பாராட்டு சான்றிதழ் மற்றும் காசோலை வழங்கினார்.
இது தவிர, நீதிமன்றங்கள், காவல் நிலையங்கள், பள்ளி - கல்லுாரிகள், குடியிருப்பு நலச்சங்கங்கள், மாநகராட்சியி ன் மண்டல அலுவலகங்கள், எம்.எல்.ஏ., அலுவலகங் களில் தேசியக்கொடி ஏற்றப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது. அனைவருக்கும் இனிப்பு வழங்கி, குடியரசு தின விழா கொண்டாடப்ப ட்டது.

