சி.எம்.டி.ஏ.,வில் 2 கூடுதல் பணியிடங்கள்: தேர்தல் அறிவிக்கும்முன் அரசு ஒப்புதல்
சி.எம்.டி.ஏ.,வில் 2 கூடுதல் பணியிடங்கள்: தேர்தல் அறிவிக்கும்முன் அரசு ஒப்புதல்
ADDED : மார் 19, 2026 05:47 AM
சென்னை: சி.எம்.டி.ஏ., கட்டுமான பிரிவுக்கு, கூடுதலாக இரண்டு கண்காணிப்பு பொறியாளர் பணியிடங்கள் உருவாக்க, தேர்தல் அறிவிப்புக்கு முன், அரசு ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.
சென்னை பெருநகர வளர்ச்சி குழுமமான சி.எம்.டி.ஏ.,வில், கட்டுமான பிரிவு தனியாக செயல்பட்டு வருகிறது. இந்த பிரிவில், ஒரு தலைமை பொறியாளர், இரண்டு கண்காணிப்பு பொறியாளர்கள், மூன்று செயற்பொறியாளர்கள் உள்ளனர்.
இதற்கே உரிய நபர்கள் இல்லாததால், வேறு துறைகளில் இருந்து அயல்பணியில் பொறியாளர்கள் அழைக்கப்படுகின்றனர்.
இந்நிலையில், மேலும் இரண்டு கண்காணிப்பு பொறியாளர் பணியிடங்களை தற்காலிக அடிப்படையில் ஏற்படுத்த, சி.எம்.டி.ஏ., முடிவு செய்தது. சமீபத்தில் நடந்த குழும கூட்டத்தில், இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதற்கு, சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கும்முன், அரசின் ஒப்புதல் கிடைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால், தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதால், இதன் தொடர் நடவடிக்கைகளை எடுக்க முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
