ADDED : செப் 28, 2025 12:44 AM

சென்னை:பம்மலில், பிரியாணி கடை கிடங்கில் எலக்ட்ரிக்கல் பணியில் ஈடுபட்டிருந்த இருவர், எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்து பலியாகினர்.
பம்மல், மூங்கில் ஏரி பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன், 51. பம்மல் காவல் உதவி மையம் எதிரே, முகல் பிரியாணி கடை நடத்தி வருகிறார். இந்த கடையின் கிடங்கு, பம்மல் விஸ்வேசபுரம் அருகே அணுகு சாலையை ஒட்டி உள்ளது.
இந்த கிடங்கில், அனகாபுத்துார், திருமுருகன் தெருவை சேர்ந்த மணிகண்டன், 35, என்பவர், எலக்ட்ரிக்கல் வேலையில் நேற்று முன்தினம் இரவு ஈடுபட்டிருந்தார். அப்போது, எதிர்பாராதவிதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. அவரை காப்பாற்ற சென்ற பிரியாணி மாஸ்டர் பார்த்திபன், 32, என்பவர் மீதும் மின்சாரம் பாய்ந்தது.
இருவரின் அலறல் சத்தம் கேட்டு, அங்கிருந்தோர் அவர்களை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் தாம்பரம் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு, மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில், இருவரும் ஏற்கனவே இறந்துவிட்டது தெரிந்தது. உடல்களை கைப்பற்றி சங்கர் நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.
