sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

ஒரு மணி நேரத்தில் 27 செ.மீ., மழை:மேக வெடிப்பால் சென்னையில் பாதிப்பு:புறநகர் பகுதிகளிலும் கொட்டி தீர்த்தது

/

ஒரு மணி நேரத்தில் 27 செ.மீ., மழை:மேக வெடிப்பால் சென்னையில் பாதிப்பு:புறநகர் பகுதிகளிலும் கொட்டி தீர்த்தது

ஒரு மணி நேரத்தில் 27 செ.மீ., மழை:மேக வெடிப்பால் சென்னையில் பாதிப்பு:புறநகர் பகுதிகளிலும் கொட்டி தீர்த்தது

ஒரு மணி நேரத்தில் 27 செ.மீ., மழை:மேக வெடிப்பால் சென்னையில் பாதிப்பு:புறநகர் பகுதிகளிலும் கொட்டி தீர்த்தது

1


UPDATED : செப் 01, 2025 10:30 AM

ADDED : செப் 01, 2025 12:45 AM

Google News

1

UPDATED : செப் 01, 2025 10:30 AM ADDED : செப் 01, 2025 12:45 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:மேக வெடிப்பு காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், நேற்று முன்தினம் இரவு விடாது மழை கொட்டித் தீர்த்தது. அதிகபட்சமாக மணலியில் ஒரு மணி நேரத்தில், 27 செ.மீ., மழை கொட்டியது. பல்வேறு பகுதிகளிலும் மழைநீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சென்னை போன்ற சமவெளி பகுதிகளில், மேக வெடிப்பு போன்ற பாதிப்புகள் ஏற்படுவது அரிதான நிகழ்வு என, வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தென்மேற்கு பருவமழை இறுதி கட்டத்தில் உள்ள நிலையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் எதிர்பாராத விதமாக நேற்று முன்தினம் இரவு அதிக கனமழை கொட்டித்தீர்த்தது.

Image 1463243


குறிப்பாக, வடசென்னையில் மணலி, கொரட்டூர், அம்பத்துார், எண்ணுார், திருவொற்றியூர் உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் மழை பெய்து, பாதிப்பை ஏற்படுத்தியது.

அரிய நிகழ்வு அதிகப்படியான மழைக்கு மேக வெடிப்புதான் காரணம் என, தெரிய வந்துள்ளது. சென்னை போன்ற சமவெளி பகுதிகளில், மேக வெடிப்பு போன்ற பாதிப்புகள் அரிதிலும் அரிதான நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து, வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்ட அறிக்கை:

சென்னையில் நேற்று காலை வரையிலான, 24 மணி நேரத்தில், மூன்று இடங்களில் அதி கனமழையும், ஆறு இடங்களில் மிக கனமழையும், 28 இடங்களில் கனமழையும் பெய்துள்ளது.

உலக வானிலை நிறுவனம், இந்திய வானிலை துறைகளின் வழிகாட்டுதல் அடிப்படையில், ஒரு குறிப்பிட்ட இடத்தில் குறுகிய காலத்தில், 10 செ.மீ.,க்கு மேல் மழை பெய்தால் அது மேகவெடிப்பு என வரையறை செய்யப்படுகிறது.

இந்த வகையில், சென்னை மணலியில், 27 செ.மீ., மணலி புதுநகர், விம்கோ நகர் பகுதிகளில் தலா, 25 செ.மீ., மழை பெய்துள்ளது. மேக வெடிப்பு காரணமாக மணலி உள்ளிட்ட பகுதிகளில் அதி கனமழை பெய்துள்ளது.

இதற்கு அடுத்தபடியாக, கொரட்டூர் - 18; மணலி புதுநகர், எண்ணுாரில் தலா 15; கத்திவாக்கம் - 13; திருவொற்றியூர், அயப்பாக்கம் தலா, 12 செ.மீ., மழை பெய்து உள்ளது.

இதுதவிர சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில், 28 இடங்களில், 6 முதல், 11 செ.மீ., வரை மழை பெய்துள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த மழையால், சென்னையின் உட்புற சாலைகள், சுரங்கப்பாதைகளில் வெள்ளம் தேங்கி, வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர். நேற்று காலையும், சில தெருக்களில் வெள்ளம் வடியவில்லை. விடுமுறை நாளானதால், மாநகராட்சி ஊழியர்கள் பணிக்கு வராத நிலையில், பல மணி நேரம் தேங்கி நின்ற வெள்ளம் தானாக வடிந்தது.

பணிகள் பாதிப்பு சில பகுதிகளில் வலுவிழந்து நின்ற மரங்கள் சாய்ந்து, தொலைத்தொடர்பு, மின்சார கேபிள்களில் விழுந்தன. வடிகால்வாய், கால்வாய் பணிக்காக தோண்டிய பள்ளத்தில் வெள்ளம் தேங்கி நின்றதால், கட்டுமான பணிகளும் பாதிக்கப்பட்டன.

பலத்த காற்றுடன் கனமழை பெய்ததால், புழல் அண்ணா நகர் பகுதியில், 30 அடி நீள பழைய சுற்றுச்சுவர், திடீரென இடிந்து விழுந்தது.

இதில், மின்கம்பம் சாய்ந்து, நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் மின் வினியோகம் தடைபட்டது. இதனால், பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் சமரச பேச்சு நடத்தியபின், அப்பகுதி மக்கள் கலைந்து சென்றனர். நேற்று மதியத்திற்கு மேல் மின் வினியோகம் சீரானது.

கூவம் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால், நொளம்பூரில் உள்ள தரைப்பாலங்கள் நீரில் மூழ்கின. இதனால், அவ்வழியே செல்ல போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. ஆறு நாட்களுக்கு முன் பெய்த மழையிலும், இந்த தரைப்பாலம், வெள்ளப்பெருக்கால் மூழ்கியது.

காரணம் என்ன?

வளிமண்டலத்தில் காற்றின் வேக மாறுபாடு, காற்று சுழற்சி, காற்று குவிதல் காரணமாக மேக வெடிப்பு ஏற்படுகிறது. நேற்று முன்தினம், திருவள்ளூர் பகுதியில் ஏற்பட்ட மழை மேகங்கள், காற்று சுழற்சியால் சென்னை நோக்கி இரவில் நகர்ந்தன. இதனால், நேற்று முன்தினம் இரவு, மணலி உள்ளிட்ட பகுதிகளில், 10:00 மணி முதல், 11:00 மணி வரையிலான சமயத்தில் அதிகனமழை கொட்டித்தீர்த்தது. இதுகுறித்து, துல்லியமாக எதையும் அறிவிக்க முடியாத நிலை உள்ளது. - ஆர்.ஹேமசந்தர், தன்னார்வ வானிலை ஆய்வாளர்



மழை பாதிப்பு விபரம் கேட்டறிந்த ஸ்டாலின்

தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்க, ஜெர்மனி சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின், சென்னை மாநகராட்சி கமிஷனர் குமரகுருபரனை, தொலைபேசியில் நேற்று தொடர்பு கொண்டார். சென்னையில் மழை நிலவரம் மற்றும் பாதிப்பு குறித்து கேட்டறிந்தார். அப்போது, 'கனமழையால் மாநகரில் பெரிதாக பாதிப்புகள் இல்லை' என, முதல்வரிடம், குமரகுருபரன் தெரிவித்துள்ளார். 'எத்தகைய மழைச்சூழலையும் எதிர்கொள்ளும் அளவில் தயாராக இருக்கவும், மக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் பணியாற்றவும், முதல்வர் அறிவுறுத்தினார்' என, மாநகராட்சி தெரிவித்துள்ளது.



ஜெர்மன் தொழில்நுட்பம் சென்னைக்கு கைகொடுத்ததா?

ஜெர்மன் தொழில்நுட்பத்தில் மழைநீரை சேமிக்கும் திட்டத்தை, 20 கோடி ரூபாய் செலவில், மாநகராட்சி செயல்படுத்தி வருகிறது. முதற்கட்டமாக மாதிரி பள்ளி விளையாட்டு மைதானம், ராஜா அண்ணாமலைபுரம் செயின்ட் மேரி சாலை, இந்திரா குடியிருப்பு, நடேசன், பால்மோர், கிரசென்ட் சாலை, ராமநாதன் சாலை ஆகிய எட்டு விளையாட்டு மைதானங்களில், தலா 5 லட்சம் லிட்டர் மழைநீர் சேகரிப்பு தொட்டிகள் அமைக்கப்பட்டு உள்ளன. மேலும், 770 பூங்காக்களில், தலா 300 லிட்டர் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளும் அமைக்கப்பட்டுள்ளன. வழக்கமாக மழை பெய்தால், விளையாட்டு மைதானங்கள் மற்றும் பூங்காக்களில் மழைநீர் தேங்கும். ஆனால் இம்முறை, ஜெர்மன் தொழில்நுட்பம் காரணமாக, இந்த இடங்களில் தண்ணீர் தேங்காமல், அங்கு அமைக்கப்பட்டுள்ள கட்டமைப்பு வழியாக நிலத்தடி நீர் சேமிக்கப்பட்டதாக, சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.



இடிந்து விழுந்த சுற்றுச்சுவர் மின் விநியோகம் பாதிப்பு பலத்த காற்றுடன் கனமழை பெய்ததால், புழல் அண்ணா நகர் பகுதியில், 30 அடி நீள பழைய சுற்றுச்சுவர், திடீரென இடிந்து விழுந்தது. இதில், மின்கம்பம் சாய்ந்து, நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் மின் விநியோகம் தடைபட்டது. இதனால், பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் சமரச பேச்சு நடத்தியபின், அப்பகுதி மக்கள் கலைந்து சென்றனர். நேற்று மதியத்திற்கு மேல் மின் விநியோகம் சீரானது.
மூழ்கிய தனியார் நிறுவனம் திருவேற்காடில் பெய்த கனமழையால், நுாம்பல் பிரதான சாலையில் இயங்கி வரும், 'ஸ்ரீ குமார் டெக்ஸ் இண்ட் கார்ப்பரேசன்' எனும் தனியார் ஆடை ஏற்றுமற்றி நிறுவனத்தை சுற்றி முழங்காலுக்கு மேல் வெள்ளம் தேங்கி நிற்கிறது. நேற்று விடுமுறை என்பதால் எந்த அசம்பாவிதமும் ஏற்படவில்லை.
பாலம் மூழ்கியது கூவம் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால், நொளம்பூரில் உள்ள தரைப்பாலங்கள் நீரில் மூழ்கின. இதனால், அவ்வழியே செல்ல போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. ஆறு நாட்களுக்கு முன் பெய்த மழையிலும், இந்த தரைப்பாலம், வெள்ளப்பெருக்கால் மூழ்கியது.



27 விமான சேவைகள் பாதிப்பு

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், நேற்று முன்தினம் இரவு 11:00 மணி முதல் நேற்று அதிகாலை வரை பெய்த கன மழையால், சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க இருந்த விமானங்கள், நீண்ட நேரம் வானில் வட்டமடித்துக் கொண்டிருந்தன.

ஹைதராபாதில் இருந்து, 14-0 பயணியருடன் சென்னை வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணியர் விமானம்; பிராங்போர்ட்டில் இருந்து, 268 பயணியருடன் சென்னை வந்த லுப்தான்ஷா ஏர்லைன்ஸ் பயணியர் விமானம் உட்பட, நான்கு விமானங்கள் சென்னையில் தரையிறங்க முடியாமல், பெங்களுரூ விமான நிலையத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டன.

கோலாலம்பூர், ஹாங்காங், திருவனந்தபுரம், இந்துார் உட்பட பல்வேறு விமான நிலையங்களில் இருந்து சென்னை வந்த, 8 விமானங்கள் தரையிறங்க முடியாமல், நீண்ட நேரம் வானில் வட்டம் அடித்து, பின் தாமதமாக தரை இறங்கின.

அதேபோல், சென்னையில் இருந்து, இலங்கை, துபாய், குவைத், மஸ்கட், சிங்கப்பூர், புனே உட்பட, 15 விமான நிலையங்களுக்கு புறப்படவிருந்த விமானங்கள், மழை காரணமாக தாமதமாக புறப்பட்டு சென்றன. இதனால், பயணியர் கடும் அவதியடைந்தனர்.

சென்னையில் தரையிறங்க முடியாமல், பெங்களூரு திருப்பி அனுப்பப்பட்ட நான்கு விமானங்கள், நேற்று அதிகாலை ஒன்றன் பின் ஒன்றாக, பெங்களூரில் இருந்து சென்னைக்கு வந்தடைந்தன.

சென்னை சர்வதேச விமான நிலையத்தில், வருகை மற்றும் புறப்பாடு என, 27 விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. இதனால், பயணியர் கடும் அவதியடைந்தனர்.






      Dinamalar
      Follow us