ADDED : நவ 13, 2024 09:12 PM
ஓட்டேரி:ஸ்ரீபெரும்புதுாரில் உள்ள ஹூண்டாய் கார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வருபவர் சுரேந்தர், 21. இவர், ஆவடியில் வீடு எடுத்து தங்கியுள்ளார். கடந்த 11ம் தேதி மாலை, ஓட்டேரி ஸ்ட்ரான்ஸ் சாலையில், தன் யமஹா பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது, எதிரே வந்த இளைஞர்கள் மூவரிடம், புளியந்தோப்பு பிரியாணி கடைக்கு செல்வதற்கான வழியை கேட்டுள்ளார்.
ஆனால், அவர்களோ முகவரி சொல்வதற்கு பதில், சுரேந்தரை தாக்கி, அவரிடமிருந்து பைக், மொபைல் போன் ஆகியவற்றை பிடுங்கினர். மேலும் சிலரை வரவழைத்து, சுரேந்தரை தாக்கியதோடு, அவரது கூகுள் பே கணக்கில் இருந்து, 700 ரூபாயை பறித்தனர்.
இதுகுறித்து, ஓட்டேரி போலீசார் வழக்கு பதிந்து, சுரேந்தரை தாக்கிய ஓட்டேரி விஷ்வா,23 உள்ளிட்ட, நான்கு பேர் கைது செய்தனர். இதன் தொடர்ச்சியாக நேற்று, 'பம்பு' ஆகாஷ், 20, விகாஷ், 21, விஷால், 22 ஆகிய மூவரை கைது செய்தனர்.
