/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வெவ்வேறு நீர்நிலைகளில் குழந்தை உட்பட 3 பேர் பலி
/
வெவ்வேறு நீர்நிலைகளில் குழந்தை உட்பட 3 பேர் பலி
ADDED : டிச 31, 2024 12:48 AM

சென்னை, சென்னை புறநகரில் வெவ்வேறு இடங்களில் தண்ணீரில் மூழ்கி மூன்றரை வயது குழந்தை உட்பட மூன்று பேர் உயிரிழந்தனர்.
திருவள்ளூர், கவரைப்பேட்டையைச் சேர்ந்தவர் முகிலன், 14; ஒன்பதாம் வகுப்பு மாணவர். பள்ளி விடுமுறை என்பதால், பொன்னேரியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்ற முகிலன், நேற்று பகல் 1:00 மணிக்கு, அங்குள்ள கோவில் குளத்தில் குளிக்கும்போது, தண்ணீரில் மூழ்கினான்.
கிராமவாசிகள் சிறுவனை மீட்டு, பழவேற்காடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போது, வழியில் உயிரிழந்தான். திருப்பாலைவனம் போலீசார் விசாரிக்கின்றனர்.
சித்தாமூர்
செங்கல்பட்டு, சித்தாமூர், தொன்னாடு கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கராஜ். இவரது மனைவி வனிதா. இவர்களது பசுக்கள், மலைப்பகுதி அருகே வயல்வெளியில் கட்டப்பட்டிருந்தன.
நேற்று காலை 7:00 மணிக்கு, வனிதா, இளைய மகள் சரஸ்வதி, 9, ஆகிய இருவரும், பால் கறக்க சென்றனர். அப்போது, சரஸ்வதி அங்கிருந்த கிணற்றில் இருந்து, வாளியில் தண்ணீர்எடுக்க முயற்சித்த போது, கால் இடறி கிணற்றில் விழுந்துள்ளார்.
சத்தம் கேட்டு, வனிதா வந்து பார்ப்பதற்குள், சரஸ்வதி நீரில் மூழ்கியுள்ளார். செய்யூர் மீட்பு படையினர், கிணற்றில் மூழ்கிய சரஸ்வதியை சடலமாக மீட்டனர். சித்தாமூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
கடம்பத்துார்
திருவள்ளூர் மாவட்டம், வெங்கத்துார் ஊராட்சியைச் சேர்ந்தவர் செந்தில்குமார், 45; பெயின்டர். இவரது மனைவி மங்கை, 40. தம்பதிக்கு 12 வயது மகள் மற்றும் மூன்றரை வயதில் மித்ரன் என்ற ஆண் குழந்தை உள்ளது.
நேற்று காலை, வீட்டின் வெளியே விளையாடி கொண்டிருந்த மித்ரன், வீட்டின் அருகே உள்ள அரண்வாயல் ஏரிக்கு செல்லும் நீர்வரத்து கால்வாயில் தவறி விழுந்துள்ளான்.
நீண்ட நேர தேடுதலுக்கு பின், மணவாள நகர் போலீசார் குழந்தையை சடலமாக மீட்டனர். திருவள்ளூர் போலீசார் விசாரிக்கின்றனர்.