/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரூ.3,000 லஞ்சம் வாங்கிய ஏட்டுக்கு 4 ஆண்டு சிறை
/
ரூ.3,000 லஞ்சம் வாங்கிய ஏட்டுக்கு 4 ஆண்டு சிறை
ADDED : மே 15, 2025 12:25 AM
காஞ்சிபுரம், காஞ்சிபுரத்தை அடுத்த ஆட்டுப்புத்துார் கிராமத்தைச் சேர்ந்தவர் மோகன். மூன்று லாரிகளை வைத்து மணல் குவாரியில் இருந்து மணலை சென்னைக்கு எடுத்துச்சென்று, ட்டுமான பணிகளுக்கு விற்று வந்தார்.
சென்னை - பெங்களுரு தேசிய நெடுஞ்சாலையில் செல்லும்போது, நெடுஞ்சாலை துறை ரோந்து வாகனத்தில் பணிபுரிந்து வந்த சிறப்பு காவல் ஆய்வாளர் முனுசாமிக்கு, ஒரு லாரிக்கு மாதம், 1,000 ரூபாய் என, மூன்று லாரிகளுக்கு 3,000 ரூபாய் கொடுக்க வேண்டும் என, கேட்டுள்ளார்.
இதுகுறித்து, மோகன் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் தகவல் தெரிவித்தார். ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை கொடுத்த போது, சிறப்பு காவல் ஆய்வாளர் முனுசாமி, தலைமை காவலர் மதியழகன் ஆகிய இருவரும், கையும் களவுமாக சிக்கினர்.
இந்த சம்பவம், 2010ம் ஆண்டு நடந்தது. லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிந்தனர். வழக்கின் விசாரணை, காஞ்சிபுரம் குற்றவியல் முதன்மை நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
விசாரணை காலத்தில், சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் முனுசாமி இறந்து விட்டார்.
விசாரணை முடிவில், தலைமை காவலர் மதியழகனின் குற்றம் நிருபிக்கப்பட்டதால், அவருக்கு இரு பிரிவுகளின் கீழ், நான்கு ஆண்டுகள் சிறை மற்றும் 20,000 ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி வசந்தகுமார் தீர்ப்பளித்தார்.