/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
40 வைர கற்கள், ரூ.1 கோடி பறிமுதல்
/
40 வைர கற்கள், ரூ.1 கோடி பறிமுதல்
ADDED : மார் 22, 2026 06:56 AM
மாதவரம்: ஆவணமின்றி எடுத்துச் செல்லப்பட்ட 40 வைர கற்கள் மற்றும் ஒரு கோடி ரூபாயை தேர்தல் பறக்கும் படையினர், நேற்று பறிமுதல் செய்தனர்.
மாதவரம் சட்டசபை தொகுதிக்குட்பட்ட செயின்ட் ஆனிஸ் கல்லுாரி அருகே, ஜி.என்.டி., சாலையில், தேர்தல் பறக்கும் படையினர் நேற்று, வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அவ்வழியே வந்த காரை சோதனை செய்தபோது, அதில் வந்தவரிடம் 40 வைரங்கள் இருந்தன. அதற்கான ஆவணங்கள் ஏதும் இல்லாததால், அவற்றை தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
பாடியநல்லுார் சுங்கச்சாவடி அருகே, ஆந்திராவில் இருந்த வந்த காரில் 1.35 லட்சம் ரூபாய்; முகப்பேர், திருவள்ளுவர் சாலையில் சுஜித்ராஜா, 29, என்பவரிடம் 4.40 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
வளசரவாக்கம், ஸ்ரீதேவிகுப்பம் பிரதான சாலையில், 'ராயல் என்பீல்டு' இருசக்கர வாகனத்தில் வந்த டாக்டர் சதீஷ்குமார், 47, என்பவரிடம் இருந்து 6 லட்சம் ரூபாய், நேற்று இரவு பறிமுதல் செய்யப்பட்டது.
அத்திப்பட்டைச் சேர்ந்த ரெடிங்ஸ்டன், 35, என்பவரிடம் இருந்து, முகப்பேர் மேற்கு பிரதான சாலையில், 3.50 லட்சம் ரூபாய்; சிந்தாதிரிப்பேட்டை, பிளாக்கர்ஸ் சாலை, கேசினோ திரையரங்கம் அருகே, சவுகார்பேட்டையைச் சேர்ந்த மலைராமன், 60, என்பவரிடம் 94,000 ரூபாய் பறிமுதல் செய்யப் பட்டது.
வேளச்சேரி, கனரா வங்கியில் நகை மதிப்பீட்டாளரான லோகநாதன், 45, எடுத்து வந்த 88,500 ரூபாய், கொடுங்கையூரில் வந்த ஆட்டோ பயணியிடம் 62,000 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. பட்டினம்பாக்கம், அய்யப்பன் கோவில் அருகே, 'மாருதி ஷிப்ட்' காரை நிறுத்தி சோதனை செய்ததில், 1.50 லட்சம் ரூபாய் மதிப்பிலான புரோட்டின் பவுடர் டப்பாக்கள் இருந்தன. இவையும் பறிமுதல் செய்யப்பட்டன. கைப்பற்றப்பட்ட பவுடர் டப்பாக்கள் மற்றும் பணம், அரசு கருவூலத்தில் வைக்கப்பட்டன.
கர்நாடகா மாநிலத்தில் இருந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்த 'லால்பாக்' விரைவு ரயிலில் வந்த பயணி தனிவேல், 57, என்பவரிடம் கட்டு கட்டாக ஐந்து லட்சம் ரூபாய், 18.14 லட்சம் மதிப்புடைய 94 கிராம் தங்க நகை ஆகியவற்றை, ரயில்வே பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்தனர்.
அம்பத்துாரில் சிக்கிய வங்கி பணம்
அம்பத்துார் தொழிற்பேட்டையில் இருந்து, கோலடி சாலை வழியாக, திருவேற்காடு பகுதியில் உள்ள ஏ.டி.எம்., மையங்களில் பணம் நிரப்ப, தனியார் வேன் நேற்று முன்தினம் இரவு சென்று கொண்டிருந்தது. அந்த வாகனத்தை, அம்பத்துாரைச் சேர்ந்த நாகேஷ், 52, என்பவர் ஓட்டி வந்தார்.
பறக்கும் படையினர் சோதனையில் உரிய பாதுகாவலர்கள் மற்றும் ஆவணங்கள் இல்லாததால், 76 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.

