ADDED : மார் 21, 2026 08:42 PM
சென்னை: ஆவணமின்றி எடுத்துச் செல்லப்பட்ட 40 வைரங்களை, தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
மாதவரம் சட்டசபை தொகுதிக்குட்பட்ட செயின்ட் ஆனிஸ் கல்லுாரி அருகே, ஜி.என்.டி., சாலையில், தேர்தல் பறக்கும் படையினர் நேற்று, வாகன சோதனையில் இருந்தனர்.
அப்போது அவ்வழியே வந்த காரை சோதனை செய்தபோது, அதில் வந்தவரிடம் 40 வைரங்கள் இருந்தன. அதற்கான ஆவணங்கள் ஏதும் இல்லாததால், அவற்றை தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்து, அரசு கருவூலத்தில் ஒப்படைத்தனர்.
அதேபோல், பாடியநல்லுார் சுங்கச்சாவடி அருகே, ஆந்திராவில் இருந்த வந்த காரை சோதனையிட்டபோது, 1.35 லட்சம் ரூபாய் இருந்தது. ஆவணங்கள் இல்லாததால் பறிமுதல் செய்யப்பட்டு, தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டது.
* ஆதம்பாக்கத்தைச் சேர்ந்தவர் லோகநாதன், 45; வேளச்சேரி, கனரா வங்கியில் நகை மதிப்பீட்டாளராக பணிபுரிகிறார். வேளச்சேரி 100 அடி சாலையில், இருசக்கர வாகனத்தில் வந்த இவரிடம் 88,500 ரூபாயை, தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். வங்கி கணக்கு துவங்க எடுத்துச்செல்வதாக கூறி உள்ளார். உரிய ஆவணம் இல்லாததால் அப்பணம், சைதாப்பேட்டை கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.
