ADDED : ஆக 23, 2025 12:29 AM
எம்.ஜி.ஆர்., நகர், கோவில் திருவிழாவில் ஏற்பட்ட தகராறில், ஆட்டோ ஓட்டுநரை வெட்டிய ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர்.
கோவூர், அனுக்கார்டன், வெங்கடேச பெருமாள் தெருவைச் சேர்ந்தவர் பிரின்ஸ்ராஜ், 29; ஆட்டோ ஓட்டுநர். இவர், மூன்று ஆண்டுகளுக்கு முன், எம்.ஜி.ஆர்., நகரில் வசித்திருந்தார்.
சில நாட்களுக்கு முன், எம்.ஜி.ஆர்., நகரில் நடந்த அம்மன் கோவில் திருவிழாவில் பிரின்ஸ்ராஜ் பங்கேற்றார். அப்போது, ஊர்வலத்தில் பிரின்ஸ்ராஜுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த நடராஜன், மோசஸ், அஜித் உள்ளிட்டோருக்கும், வாய் தகராறு ஏற்பட்டது. அங்கிருந்தோர் இருதரப்பினரையும் சமாதானம் செய்து அனுப்பினர்.
இந்நிலையில், கடந்த 20ம் தேதி பிரின்ஸ்ராஜ், தன் நண்பர்களுடன் எம்.ஜி.ஆர்., நகரில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்குவந்த நடராஜன் மற்றும் அவரது நண்பர்கள், பிரின்ஸ்ராஜ் தரப்பினரிடம் தகராறு செய்து, பாட்டில் உள்ளிட்டவற்றால் தாக்கினர்.
எம்.ஜி.ஆர்., நகர் போலீசார் விசாரித்து, நடராஜன், 23, அஜித், 29, வசந்தகுமார், 24, ரமேஷ், 23, பரத், 22 ஆகிய ஐந்து பேரை கைது செய்து, ஒரு கத்தியை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.
