ADDED : செப் 30, 2024 12:22 AM

சென்னை, சென்னையில், 53 இடங்களில் தானியங்கி மழைமானிகள் அமைக்கப்பட்டு உள்ளது.
இது குறித்து, மாவட்ட வருவாய் துறை அதிகாரிகள் கூறியதாவது:
புதிதாக உருவான கொளத்துார் உள்ளிட்ட, 17 தாலுகா அலுவலக எல்லையில் உள்ள வருவாய் துறை, மாநகராட்சி, குடிநீர் வாரியம் உள்ளிட்ட அரசு அலுவலக கட்டடங்களை தேர்வு செய்து, 53 இடங்களில் தானியங்கி மழைமானி அமைக்கப்பட்டு உள்ளது.
இதில் பதிவாகும் மழை அளவு, 'சென்சார்' வாயிலாக, சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மழை அளவு கட்டுப்பாடு அறையில் பதிவாகும்.
அங்கிருந்து மொத்தமாக தகவல் சேகரித்து, வானிலை ஆய்வு மையம் மற்றும் பேரிடர் அலுவலகங்களுக்கு அனுப்பப்படும். இதற்கு ஏற்ப, தானியங்கி மழைமானிகளில் தொழில்நுட்பம் அமைக்கப்பட்டு உள்ளது.
மழை அளவைப் பொறுத்து, அந்தந்த பகுதியில் பேரிடர் பணிகள் மேற்கொண்டு, மக்களை பாதுகாக்க முடியும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

