கொரட்டூர்:ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம் எனும் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு துவங்கி, 100வது ஆண்டை வரவேற்கும் விதமாக, தமிழகத்தில் 57 இடங்களில் நேற்று அணிவகுப்பு ஊர்வலங்கள் நடந்தன.
அந்த வகையில், கொரட்டூர், நல்லி குப்புசாமி விவேகானந்தா வித்யாலயா ஜூனியர் கல்லுாரியில், விழா நடந்தது.
மூத்த பத்திரிகையாளர் வி.எஸ். ராமன் தலைமையில், காக்கி, வெள்ளை சீருடை அணிந்து, 250 பேர் அணிவகுப்பு பேரணியில் பங்கேற்றனர்.
பேரணியில் பங்கேற்ற அனைவரும் தியான பயிற்சி மேற்கொண்ட பின், கொடியேற்றம் நிகழ்ச்சி நடந்தது.
தொடர்ந்து, டாக்டர் மோகன் பாவகத், சுரேஷ் சோனி மற்றும் அருண்குமார் ஆகியோர் சொற்பொழிவாற்றிய 'தற்காலச் சூழலில் ஹிந்துத்துவ' எனும் புத்தகம் வெளியிடப்பட்டது.
பொதுக்கூட்டத்தில் மூத்த பத்திரிகையாளர் வி.எஸ்.ராமன் பேசியதாவது:
தேச ஒற்றுமை, எழுச்சி, ஹிந்து சனாதன ஒற்றுமை ஆகியவை தான், நம் இயக்கத்தை கட்டுக்கோப்பாக வைத்துள்ளது. 'போற்றுவோர் போற்றட்டும், துாற்றுவோர் துாற்றட்டும்' என, கீதையில் கிருஷ்ணர் கூறியது போல், நமது இலக்கு, நாட்டின் தேச பக்தியை நோக்கி செல்ல வேண்டும், சனாதனத்தை நோக்கி செல்ல வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
சிறப்பு அழைப்பாளர், மாநில சமுதாய நல்லிணக்க பொறுப்பாளர் குறு சுப்ரமணியன் பேசுகையில்,''ஆர்.எஸ்.எஸ்., இயக்கம், பல தடைகளை கடந்து 100வது ஆண்டை நோக்கி நடந்து கொண்டிருக்கிறது.
ஆர்.எஸ்.எஸ் என்றால் 'ரெடி பார் சோஷியல் சர்வீஸ்' என்றும் சொல்லலாம். நாட்டில் நடக்கும் ஒவ்வொரு பிரச்னையிலும் உடனடியாக களத்தில் இறங்கி, உயிரை பணயம் வைத்து சேவை செய்கிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
■ செங்குன்றம் அடுத்த பாடியநல்லுாரில், ஆர்.எஸ்.எஸ்., பேரணி நேற்று நடந்தது. இதில், ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் உட்பட 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
பாடியநல்லூர் திடலில் துவங்கிய பேரணி, செங்குன்றம் - திருவள்ளூர் கூட்டுச்சாலை சென்றடைந்து. சென்னை - கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலை வழியே மீண்டும் திடலை வந்தடைந்தது.
வழிநெடுகிலும் பேண்டு வாத்தியங்கள் முழக்கங்களுடன் சென்றவர்கள் மீது, பொதுமக்கள் பூக்கள் துாவி வரவேற்றனர்.
அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில் வழிநெடுகிலும், கொரட்டூர் மற்றும் பாடிநல்லுாரில் 600 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

