ADDED : மார் 19, 2026 05:47 AM
சென்னை: சட்டசபை தேர்தலில், சென்னை மாவட்டத்தில், 80,000க்கும் மேற்பட்டோர் தபால் ஓட்டு அளிக்க உள்ளதாக, மாவட்ட தேர்தல் அதிகாரி தெரிவித்தார்.
சென்னை மாவட்டத்தில், 16 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இவற்றில், 28.30 லட்சம் பேர் ஓட்டளிக்க உள்ளனர். இதற்காக, 978 இடங்களில், 4,079 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன.
இதில், 100 சதவீதம் ஓட்டுப்பதிவை உறுதி செய்யும் வகையில், 80 வயதுக்கு மேற்பட்டோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் தேர்தல் பணிகளில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு, தபால் ஓட்டு அளிக்க வாய்ப்பு தரப்படுகிறது.
சென்னையில், 80 வயதுக்கு மேற்பட்ட 22,293 பேர்; மாற்றுத்திறனாளிகள் 12,347 பேரும் தபால் ஓட்டு அளிக்க முடியும்.
மேலும், தேர்தல் பணிகளில் ஈடுபடும் போலீசார், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், அதிகாரிகள் ஆகியோர் தபால் ஓட்டு செலுத்த உள்ளனர்.
இதுகுறித்து, மாவட்ட தேர்தல் அதிகாரிகள் கூறுகையில், 'சென்னை மாவட்டத்தில், 80,000 பேர் தபால் ஓட்டு செலுத்த உள்ளனர். அரசு அதிகாரிகள் பயிற்சி வகுப்பின்போது, தபால் ஓட்டு பதிவு செய்யலாம். மாற்றுத்திறனாளிகள், முதியோரின் வீடுகளுக்கு சென்று, தபால் ஓட்டு பதிவு செய்து பெறப்படும்' என்றனர்.
